Last Updated : 13 Mar, 2019 03:10 PM

 

Published : 13 Mar 2019 03:10 PM
Last Updated : 13 Mar 2019 03:10 PM

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பிரதான கட்சிகளின் வேட்பாளராக காரைக்காலைச் சேர்ந்தவர் நிறுத்தப்படுவாரா?

புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒருவரை பிரதான அரசியல் கட்சிகள் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு காரைக்கால் மக்களிடையே இருந்து வருகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் என நான்கு பிராந்தியங்களை உள்ளடக்கியது. ஒரு மக்களவை உறுப்பினரையும், ஒரு மாநிலங்களவை உறுப்பினரையும் கொண்டது. புதுச்சேரிக்கு அடுத்து பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் காரைக்கால் பெரிய பிராந்தியமாக உள்ளது.

பொதுவாக மற்ற பிராந்தியங்கள் அளவுக்கு காரைக்கால் பிராந்தியம் வளர்ச்சியடையவில்லை என்ற குற்றச்சாட்டும், வருத்தமும் காரைக்கால் மக்களிடம் நீண்ட காலமாக உள்ளது.

புதுச்சேரியை இதுவரை ஆட்சி செய்த அரசுகளும், தற்போது ஆளுகின்ற அரசும் காரைக்காலை பல நிலைகளிலும் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக பல்வேறு உதாரணங்களை சுட்டிக்காட்டி ஒரு சாரார் தொடர்ந்து கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், காரைக்காலைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்தினால் காரைக்கால் பிராந்தியம் வளர்ச்சியடைவதற்கும், மத்திய அரசின் மூலம் பல்வேறு திட்டங்களை இங்கு கொண்டு வருவதற்கும் வாய்ப்பாக அமையும் என பலர் கருதுகின்றனர். சமூக ஊடகங்களிலும் சிலர் இதுபோன்ற கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வரும் மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியானது பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரசுக்கும், காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரசுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு கட்சிகளுக்கிடையேதான் பிரதான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பிரதானக் கட்சிகள் காரைக்காலைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இப்பகுதி மக்களிடையே உள்ளது.

இதுகுறித்து காரைக்கால் போராட்டக்குழு அமைப்பாளரும், மூத்த வழக்கறிஞருமான எஸ்.பி.செல்வசண்முகம் கூறியபோது, "முன்பெல்லாம் புதுச்சேரி மக்களவை உறுப்பினராக காரைக்காலைச் சேர்ந்தவரும், மாநிலங்களவை உறுப்பினராக புதுச்சேரியை சேர்ந்தவரும் இருப்பர். 2004-ம் ஆண்டு வரை இந்த நிலை இருந்தது. பின்னர் இரு உறுப்பினர்களுமே புதுச்சேரியை சேர்ந்தவர்களாகவே இருந்து வருகின்றனர். அவர்கள் பெரிதும் காரைக்காலை கண்டுகொள்வதில்லை. காரைக்கால்- பேரளம் அகல ரயில்பாதை திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் கிடப்பில் உள்ளன. அதனால் இத்தேர்தலில் பிரதானக் கட்சிகள் காரைக்காலைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறச் செய்ய வேண்டும்" என்றார்.

கீழக்காசாக்குடியைச் சேர்ந்த விவசாயி வி.ராஜா(எ) முத்துக்கிருஷ்ணன் கூறியபோது, "சுற்றுலா, ஆன்மிகத் தலம் என பல நிலைகளில் காரைக்கால் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருக்கிறது. ஆனால், அதற்கேற்ற வகையில் மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட போதுமானதாக இல்லை. இப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மக்களவை உறுப்பினரானால் இந்த நிலை ஓரளவு மாறும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x