Published : 07 Apr 2014 12:17 PM
Last Updated : 07 Apr 2014 12:17 PM

இடதுசாரிகள் தனித்து மட்டுமல்ல தனித்தன்மையோடும் போட்டியிடுகிறோம்: ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும் தனித்து போட்டியிடுவது மட்டும் அல்ல, தனித்தன்மையோடும் போட்டியிடுகிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன் கூறினார்.

தண்டையார்பேட்டை வ.உ.சி. நகர் பகுதியில் வடசென்னை நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் உ.வாசுகிக்கு வாக்கு சேகரிப்பதற்கான கூட்டத்தில் அவர் பேசியதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் பொருளாதார கொள்கைகள் காரணமாக, மக்கள் அவதிப்பட்டு வரு கிறார்கள். ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பி ஆகிய அமைப்புகளின் தூண்டுதலால் 2013 ஆம் ஆண்டு மட்டும் 828 மதக் கலவரங்கள் நடைபெற்றுள்ளன. அதில் 133 பேர் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.அந்த ஆர்எஸ்எஸ் தான் மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி உள்ளது.

டெல்லியில் அக்டோபர் 30ம் தேதி நடந்த வகுப்புவாத எதிர்ப்பு மாநாட்டில் கையெழுத்து போடுவதற்கு அதிமுக வந்தது. ஆனால் அதற்கு பிறகு பாஜகவை பற்றியோ வகுப்புவாதம் பற்றியோ அதிமுக ஒரு விமர்சனமும் செய்யவில்லை. காங்கிரஸ் மற்றும் பாஜகவோடு கூட்டணி இல்லை என திமுக கூறினாலும் காங்கிரஸ் மன்னிப்பு கேட்டால் சேர்த்து கொள்வோம் என கருணாநிதி கூறுகிறார்.

அதோடு மோடி கடுமையாக உழைப்பவர் என்றும் கூறுகிறார். திமுக தனது முன்வாசலை காங்கிரசுக்கும் பின்வாசலை பாஜகவுக்கும் திறந்து வைத்து இருக்கிறது. திமுகவுக்கு விழும் ஓட்டு காங்கிரசுக்கு விழும் ஓட்டு. அதிமுகவுக்கு விழும் ஓட்டு பாஜகவுக்கு விழும் ஓட்டு.

ஊழலை எதிர்த்து பேசுகிற தகுதி இடது சாரிகளை தவிர்த்து வேறு யாருக்கும் கிடையாது. நாங்கள் தேர்தலுக்காக மட்டும் மக்களை சந்திப்பவர்கள் அல்ல. தண்டையார்பேட்டையில் பட்டா பெயர்மாற்றம் உள்ளிட்ட பல மக்கள் பிரச்சினைகளுக்காக போராடி உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் வடசென்னை தொகுதி வேட்பாளர் உ.வாசுகி ஆர்.கே நகர் பகுதிச் செயலாளர் லோகநாதன், இந்திய கம்யூனிஸ்ட் பகுதி செயலாளர் எம்.எஸ் மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x