Published : 29 Apr 2014 11:00 AM
Last Updated : 29 Apr 2014 11:00 AM

ராம்தேவின் யோகாசன முகாம்களுக்கு இமாசலப் பிரதேசத்தில் தடை

இமாசலப் பிரதேசத்தில் பாபா ராம்தேவின் யோகாசன முகாமிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தனது தொகுதியில் உள்ள தலித் வீடுகளுக்கு தேனிலவுக்குச் செல்வதைப் போன்று ராகுல் காந்தி சென்று வருகிறார் என்று ராம்தேவ் சமீபத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

அதைத் தொடர்ந்து யோகாசன முகாம்களில் அரசியல் தொடர்பான பிரச்சாரம் நடைபெறுமானால், அதற்கு அனுமதியளிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ராம்தேவ் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேசத்தின் லக்னோ, சோன்பத்ரா, மகாராஷ்டிரத்தின் நாக்பூர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளத் தலைவரும், பிஹார் மாநில அமைச்சருமான சியாம் ரஜாக், பாட்னா முதன்மை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராம்தேவ் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது.

இமாசலத்தில் தடைஇமாசலப் பிரதேசத்தின் கங்க்ரா, சம்பா, ரெஹான் ஆகிய இடங்களில் யோகாசன முகாம்களை நடத்த யோகா குரு பாபா ராம்தேவ் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. அதற்கு அனுமதி அளிக்க வேண்டாம் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியிருப்பதாக தலைமைத் தேர்தல் அலுவலர் நரீந்தர் சவுகான் திங்கள்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக ராம்தேவ் கூறியதாவது: அரசியல் சார்பற்ற எனது முகாமிற்கு அனுமதி மறுக்கப்படுவது ஜனநாயகமற்ற செயலாகும். மே 16-ம் தேதி வரை எனது முகாம்களுக்கு அனுமதி தரக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு மத்திய அரசு நெருக்குதல் அளித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளேன்.

ராகுல் காந்தியையோ, தலித் மக்களையோ அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. தேனிலவு காலம் முடிவடைந்துவிட்டது என்று அரசியலில் பயன்படுத்தப்படும் சொற்பதத்தை, அதே அர்த்தத்தில்தான் நான் குறிப்பிட்டேன். ராகுல் தொடர்பான எனது கருத்து திரித்துக் கூறப்பட்டுள்ளது. தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அதற்காக நான் மன்னிப்புக் கேட்ட பின்பும், தலித் வாக்கு வங்கி அரசியலுக்காக காங்கிரஸ் தொடர்ந்து அதைப் பற்றி பேசி வருகிறது” என்றார்.

ஏற்கெனவே லக்னோ, அமேதி மாவட்ட நிர்வாகங்கள் ராம்தேவின் யோகாசன முகாம்களுக்கு அனுமதி மறுத்துவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பூரி சங்கராச்சாரியார் கண்டனம்

ராகுல் காந்தி தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த யோகா குரு பாபா ராம்தேவிற்கு பூரி கோவர்தன பீடம் சங்கராச்சாரிய சுவாமி அதோக்சஜானந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஹரித்வாரில் செய்தியாளர்களிடம் சங்கராச்சாரிய சுவாமி அதோக்சஜானந்த் கூறியதாவது: துறவிகள் புனிதமான சொற்களையே பேச வேண்டும். ஏற்கெனவே ஒருமுறை பெண்களின் உடையை அணிந்து துறவிகளுக்கு பாபா ராம்தேவ் இழுக்கை தேடித்தந்துள்ளார். அவர் தனது வாயை மூடி இருப்பதுதான் நல்லது. தனது பணியில் (யோகாசனப் பயிற்சி) மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.

தந்தை மற்றும் பாட்டியின் அரவணைப்பை சிறு வயதிலேயே இழந்துவிட்ட ஒருவரை (ராகுல் காந்தி) நற்பண்புள்ள சாதாரண மனிதர் கூட அவ்வாறு பேசியிருக்க மாட்டார். அவ்வாறிருக்க துறவி ஒருவர் இவ்வாறு பேசலாமா? மக்களை ஏமாற்றி தவறான நம்பிக்கையை ஏற்படுத்தும் பணியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. தனது திட்டத்தில் ராம்தேவ் போன்றவர்களை அக்கட்சி பயன்படுத்திக் கொள்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x