Published : 25 Apr 2014 07:44 PM
Last Updated : 25 Apr 2014 07:44 PM

இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு: காங். புதிய வாக்குறுதிக்கு பாஜக கண்டனம்

பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் புதிய வாக்குறுதியை வெளியிட்டிருப்பதை, பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியான புதிய அறிவிப்பு ஒன்றில், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தத் துணைத் தேர்தல் அறிக்கை குறித்து கேட்கப்பட்டதற்கு பதிலளித்த சட்ட அமைச்சர் கபில் சிபல், "பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு மசோதோ உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

காங்கிரஸ் தற்போது நடந்து கொண்டிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால், அந்த மசோதா நிறைவேற்றபடும்.

இதனை காங்கிரஸ் தேர்தலுக்கான துணை அறிக்கையாக வெளியிடவில்லை. இந்த மசோதா தொடர்பான விவாதங்கள் நடைபெற வேண்டிய நிலையில், நாங்கள் இதனை மக்கள் முன்னிலையில் தெரிவிப்பதில் எந்த தவறும் இல்லை" என்றார்.

இதனிடையே காங்கிரஸை கடுமையாக விமர்சித்த பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர், "மக்களவைத் தேர்தல் பல்வேறு கட்டமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் இதுபோன்ற வாக்குறுதிகளை வெளியிடுவது, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்களின் வாக்கினை பெறும் கடைசி நேர முயற்சி.

தோல்வியை சந்திக்க இருக்கும் கட்சி இதுபோன்ற துணைத் தேர்தல் அறிக்கைகளை, கடைசி நேரத்தில் வெளியிடுவது ஒன்றும் புதிது அல்ல. மக்கள் இதனை நம்ப மாட்டார்கள்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x