Published : 26 Apr 2014 01:09 PM
Last Updated : 26 Apr 2014 01:09 PM

ராகுலை விமர்சித்த ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ்

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை அவதூறாக பேசிய யோகா குரு பாபா ராம் தேவ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

யோகா குரு பாபா ராம்தேவ், மீண்டும் தனது பேச்சால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேசத்தில் தனது தொகுதியில் உள்ள தலித் மக்கள் வீடுகளுக்கு பொழுதுபோக்குவதற்காகவும், தேனிலவுக்காகவும் செல்கிறார் என ராம்தேவ் கூறியிருந்தார்.

மேலும், ராகுல் காந்தி திருமண விவகாரம் குறித்தும் ராம் தேவ் பேசியிருந்தார். ராகுல் காந்திக்கு இந்தியப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை. ஆனால், அவர் வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் பிரதமர் ஆக முடியாது என சோனியா காந்தி கூறியதால் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார் எனவும் ராம்தேவ் கூறியிருந்தார்.

ராம்தேவின் இந்த கருத்து காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ராம்தேவ் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தனது ட்விட்டர் வலைப்பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திக்விஜய்சிங் கூறியதாவது: "ராம்தேவ் பேச்சு தலித் மக்களுக்கு எதிரானது. ராகுலை அவதூறாக பேசிய ராம்தேவ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மோடியும், பாஜகவும் ராம்தேவ் பேச்சு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x