Published : 18 Apr 2014 09:20 PM
Last Updated : 18 Apr 2014 09:20 PM

அரசு ஆசிரியர்களுக்கு மிரட்டலா?- முலாயம் சிங்குக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தமது கட்சிக்கு வாக்களிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களை மிரட்டியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்க, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி, உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் புலாந்த்ஷார் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முலாயம், "மாநிலத்தில் துவக்கப் பள்ளியில் ஒப்பந்தத்தின் அடிப்பட்டையில் வேலைக்கு சேர்க்கப்பட்ட ஆசிரியர்களை நாங்கள் நிரந்தரமாக்கியுள்ளோம்.

எனவே, இப்போது நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும். இல்லை என்றால் பணி நிரந்தரம் திரும்பப் பெறப்படும்" என்று கூறியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஞாயிற்றுக்கிழமைக்குள் முலாயம் விளக்கம் அளிக்கவில்லை என்றால், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.

தேர்தல் விதிமுறையின்படி, மத்தியில் அல்லது மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் கட்சி, தனது அதிகாரத்தை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது. இதனை மீறும் விதமாக அரசு துவக்கப் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என முலாயம் மிரட்டியுள்ளதாக தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x