

சென்னை: தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முழு மதிப்பெண் (சென்டம்) பெறும் மாணவர்களின் விடைத்தாள்களை முகாம் அலுவலர்கள் முழுமையாக ஆய்வு செய்து கையொப்பமிட வேண்டும் என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 2 முதல் 6-ம் தேதி வரை நடத்தப்பட்டன. இத்தேர்வை சுமார் 17 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.
விடைத்தாள் திருத்தும் பணி: இதில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி கடந்த 6-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து, 10-ம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி இன்று (ஏப்.10) தொடங்குகிறது.
இப்பணியில் ஈடுபடும் முதுநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வுத் துறை விரிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. இந்நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டின்போது நூற்றுக்கு நூறு (சென்டம்) மதிப்பெண் பெறும் மாணவர்களின் விடைத்தாள்களை முகாம் அலுவலர் ஆய்வு செய்து கையொப்பமிட வேண்டும் என்று தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்: இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தேர்வுத் துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:
பொதுத் தேர்வுகளின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி தொடர்பாக அனைத்து முகாம் அலுவலர்களுக்கும் ஏற்கெனவே நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றி மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, மதிப்பீட்டுப் பணியின்போது முழு மதிப்பெண் (‘சென்டம்’) பெறும் மாணவர்களின் விடைத்தாள்களை கவனமாக ஆய்வு செய்து கையொப்பமிட வேண்டும் என்று சமீபத்திய மண்டலக் கூட்டத்தில் முடிவானது. எனவே, அனைத்து முகாம் அலுவலர்களும் தங்கள் மையத்தில் முழு மதிப்பெண் பெறும் தேர்வர்களின் பட்டியலை பதிவிறக்கம் செய்து, அவற்றை முழுமையாக ஆராய்ந்து ஒப்புதல் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.