

‘இந்திய ஏவுகணை நாயகன்’ அப்துல் கலாம் குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய பிறகும், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல கல்வி நிறுவனங் களில் பேராசிரியராகப் பணியாற்றி, மாணவர்களை ஊக்குவிப்பதில் தனது இறுதி மூச்சுவரை கவனம் செலுத்தினார்.
தமது ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் சிவசுப்பிரமணியம், பறவைகள் பறக்கும் விதத்தைக் கரும்பலகையில் வரைந்து விளக்கியதைவிட, ராமேஸ் வரம் கடற்கரைக்கு அழைத்துச் சென்று நேரடிச் செய்முறையாகக் காட்டியதையே சிறந்த கற்பித்தல் முறையாக கலாம் குறிப்பிட்டார்.
ஏட்டுக் கல்வியுடன் செயல்வழிக் கற்றலே மாணவர்களின் மனதுக்குள் லட்சியத்தை விதைக்கும் என நம்பினார். மாணவர்களும் இளைஞர்களும் பின்வரும் கொள்கைகளைத் தன் வாழ்நாளில் கடைப்பிடிக்க வேண்டும் என அப்துல் கலாம் வலியுறுத்தினார்:
உயர்ந்த இலக்கு: சிறிய இலக்கை வைத்திருப்பது குற்றம்; பெரிய லட்சி யத்துக்காகக் கடுமையாக உழைக்க வேண்டும்.
நேர்மை, சேவை: சாதி, மத, இனவேற்றுமைகளைக் கடந்து சமூகத் துக்கும் நாட்டுக்கும் பயனுள்ள மனிதராக வாழ வேண்டும்.
தீமை தவிர்த்தல்: போதை, தீய பழக்கங்களுக்கு அடிமையாகாமல், பிறரையும் அதிலிருந்து மீட்க முயல வேண்டும்.
இயற்கைப் பாதுகாப்பு: சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொண்டு, குறைந்தபட்சம் ஐந்து மரக் கன்றுகளையாவது நட்டுப் பராமரிக்க வேண்டும்.
தோல்வியில் பாடம்: வெற்றி பெற்றவர்களின் வரலாற்றைவிட, தோல்வி அடைந்தவர்களின் வரலாறுகளைப் படிக்கும்போதே, வெற்றிக்கான உண் மையான வழிமுறைகள் விளங்கும்.
சம வாய்ப்பு: அனைவருக்கும் ஒரே மாதிரியான திறமை இல்லை என்றாலும், திறமையை வளர்த்துக்கொள்ளச் சமமான வாய்ப்புகள் உள்ளன.
வகுப்பறை நம்பிக்கை: கரும் பலகையின் கறுப்பு நிறமே மாணவர் வாழ்வில் ஒளியேற்றுகிறது. தேசத்தின் மிகச் சிறந்த மூளைகள் பெரும்பாலும் வகுப்பறையின் கடைசி பெஞ்சில் இருக்கக்கூடும்.
சவால்கள்: வாழ்க்கையில் வரும் சங்கடங்கள், உங்களை அழிக்க வரவில்லை; உங்கள் உள்மன ஆற்றலை வெளிப்படுத்தவே வருகின்றன.
சின்னச் சின்ன அடிகளாக, தொடர்ச்சியான உழைப்போடும் தன்னம்பிக்கையோடும் முயன்றால் எந்தப் பின்னணியில் இருந்துவரும் மாணவரும் சிகரத்தைத் தொட முடியும் என்பதே கலாம் தரும் செய்தி.