

சென்னை: பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. கலந்தாய்வு ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆக.30 வரை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1.80 லட்சம் இடங்கள் உள்ளன. இவை ஒற்றைச்சாளர முறையில் பொதுக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. நடப்பு கல்வி ஆண்டில் பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 2.36 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டு, அவர்களது கல்விச் சான்றிதழ்கள் ஆன்லைனில் சரிபார்க்கப்பட்டன.
இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித் துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் நேற்று வெளியிட்டார். 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்ற 53 மாணவர்களின் பட்டியலையும் வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:
மாணவர்கள் தங்கள் தரவரிசையை www.tneaonline.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். தரவரிசைப் பட்டியலில் 53 பேர் 200-க்கு 200 கட் ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ளனர். தருமபுரி மாணவி எஸ்.அக்ஷிதா, திருப்பூர் மாணவர் ஏ.ரோஹித் பாலன், நாமக்கல் மாணவர் ஏ.வெங்கடகிருஷ்ணன் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர்.
தரவரிசையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுப் பிரிவில் 46,604 பேர், விளையாட்டு வீரர்கள் பிரிவில் 3,210 பேர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவில் 1,176 பேர், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 500 பேர் இடம்பெற்றுள்ளனர்.
தரவரிசையில் பெயர் விடுபட்டிருந்தாலோ, வேறு ஏதேனும் குறைகள் இருந்தாலோ மாணவர்கள் ஜூலை 6-ம் தேதிக்குள் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையத்தை (TFC) அணுகி தீர்வு பெறலாம். அதேபோல, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கோராமல் விடுபட்ட அரசுப் பள்ளி மாணவர்களும் (6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்தவர்கள்) அங்கு சென்று பெயரை இணைத்துக் கொள்ளலாம்.
முதல்கட்டமாக 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவினருக்கு (மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினரி்ன் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள்) ஜூலை 13, 14-ம் தேதிகளிலும், சிறப்பு பிரிவினருக்கான பொதுக் கலந்தாய்வு ஜூலை 15 முதல் 18-ம் தேதி வரையும் இணையவழியில் நடைபெறும். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இணையவழியில் ஜூலை 20-ம் தேதி தொடங்கி ஆக.30-ம் தேதி வரை தொடர்ந்து 40 நாட்கள் நடைபெற உள்ளது. துணை கலந்தாய்வு உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் செப்.10-ம் தேதிக்குள் முடிக்கப்படும்.
பொறியியல் படிப்பில் மொத்தம் 2.66 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு கூடுதலாக 19,657 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசு நிர்ணயித்ததைவிட தனியார் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, கல்லூரிகள் கட்டாய நன்கொடை வாங்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.