

கோப்புப் படம்
மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வு மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.
நடப்பு (2025-26) கல்வி ஆண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு ஜனவரி 10-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. விருப்பம் உள்ள 8-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் தேர்வுத் துறை இணையதளத்தில் (dge.tn.gov.in) விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அதை பூர்த்தி செய்து, தேர்வுக் கட்டணம் ரூ.50-ஐ சேர்த்து, தாங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் டிசம்பர் 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்த கூடுதல் விவரங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டு மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.