

சென்னை: சிறப்பு டெட் தேர்வுக்கான ‘கீ ஆன்ஸர்’ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ஜூலை 4 மற்றும் 5-ம் தேதி நடத்தியது. இடைநிலை ஆசிரியர்களுக்கான டெட் தாள்-1 தேர்வை 59,535 பேரும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள்-2 தேர்வினை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 929 பேரும் எழுதினர். இந்நிலையில் டெட் தேர்வுக்கான உத்தேச விடைகளை (கீ ஆன்ஸர்) ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) வெளியிட்டுள்ளது.
இந்த உத்தேச விடைகளில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களுடன் ஜூலை 22-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் எஸ்.சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.
தற்போது சிறப்பு டெட் தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டிருப்பதால் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், பணியில் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் இந்த ஆண்டு பிஎட் முடித்த பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் பொது டெட் தேர்வுக்கான அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
டிஆர்பி 2026 தேர்வுக்கால அட்டவணையின்படி, இந்த ஆண்டுக்கான பொது டெட் தேர்வு அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டு ஜூலையில் தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.