“தகிடுதத்த வேலைகளை விடுத்து ‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தை செயல்படுத்துக” - பழனிசாமி

“தகிடுதத்த வேலைகளை விடுத்து ‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தை செயல்படுத்துக” - பழனிசாமி
Updated on
2 min read

சென்னை: “வாய்ச் சவடால் அடிப்பது, ரீல்ஸ் விடுவது, குதிரை பேரம் நடத்தி ஆட்சியைக் காப்பாற்ற முயல்வது போன்ற தகிடுதத்த வேலைகளையெல்லாம் கைவிட்டுவிட்டு, விவசாயப் பெருமக்களுக்கு, குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்யும் ‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தை மத்திய அரசின் துணையோடு செயல்படுத்துமாறு தவெக அரசை வலியுறுத்துகிறேன்,” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக காவிரிப் படுகைகள் வளம் பெறவும், மக்கள் நலன் பெறவும், எனது தலைமையிலான அரசு 2019-ஆம் ஆண்டு தமிழகத்தில் காவிரி ஆறு மற்றும் அதன் துணை ஆறுகளைப் புத்துயிர் பெறச் செய்தல், மேம்படுத்துதல் மற்றும் மாசுபடுவதில் இருந்து முழுமையாக மீட்டெடுத்தல் அகியவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு ‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற ஒரு உன்னதத் திட்டத்தை முன்னெடுத்தோம்.

இதற்காக ரூ.11,250 கோடி மதிப்பீட்டில் முதல்நிலை திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பாரதப் பிரதமரிடம் நானே நேரில் வழங்கி இத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தினேன்.

கொள்கை அளவில் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையிலேயே இந்தத் திட்டம் சேர்க்கப்பட்டு, அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் மத்திய அரசின் ஆலோசனையின்படி, முதற் கட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, தொழில்நுட்ப அனுமதியைப் பெறுவதற்காக ஹைதராபாத்தில் உள்ள சுற்றுச்சூழல், பாதுகாப்புப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு, அனுமதியும் பெறப்பட்டது.

இந்நிலையில் 2021-ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையிலும், இத்திட்டத்தின் முதற்கட்டப் பணிகளுக்காக மத்திய அரசு (2024-ஆம் ஆண்டு) சுமார் ரூ. 935 கோடிக்கு ஒப்புதல் அளித்தது. இதனை மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் செலவிட ஒப்புக்கொள்ளப்பட்டது.

கடந்தகால திமுக அரசு 2024 முதல் ஆட்சியைவிட்டு இறங்கும்வரை இத்திட்டத்திற்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. இதனால் திட்டம் துவக்கப்படவேயில்லை. மத்திய அரசு இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த உடனேயே பணிகளைத் துவக்கி இருந்தால், இந்நேரம் மத்திய அரசின் நிதி பெறப்பட்டு முதற்கட்டப் பணிகள் 30 சதவீதம் முடிவடைந்திருக்கும். ஐந்தே ஆண்டில் 5 லட்சம் கோடி ரூபாயை கடனாகப் பெற்று வீண் விரயம் செய்த திமுக அரசு, நிதியை ஒதுக்காமல், மத்திய அரசின் பங்கையும் பெறாமல் உன்னதான ஒரு திட்டத்தைக் கிடப்பில் போட்டது.

‘மாற்றம் ஒன்றே மாறாதது’ என்ற சித்தாந்தத்தை நாவளவில் சொல்லி, தங்களை ‘தூய சக்தி’ என்று அழைத்துக்கொண்டு, தமிழகத்தில் மாற்றம் கொண்டுவருவோம் என்ற முழக்கத்துடன் ஆட்சியில் அமர்ந்துள்ள தவெக அரசு, தமிழக மக்களுக்காகவும், தமிழக விவசாயப் பெருங்குடி மக்களுக்காவும், புதிதாக எதையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

மக்கள் விரோத திமுக அரசால் முடக்கி வைக்கப்பட்ட ‘நடந்தாய் வாழி காவேரி திட்டத்தை’ மத்திய அரசின் துணையோடு உடனடியாகத் துவக்கி பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

வாய்ச் சவடால் அடிப்பது, ரீல்ஸ் விடுவது, குதிரை பேரம் நடத்தி ஆட்சியைக் காப்பாற்ற முயல்வது’ போன்ற தகிடுதத்த வேலைகளையெல்லாம் கைவிட்டுவிட்டு, விவசாயப் பெருமக்களுக்கு, குடிநீர்த் தேவைகளை பூர்த்தி செய்யும் ‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தை செயல்படுத்துமாறு தவெக அரசின் ‘கனவுலக முதலமைச்சரை’ வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

“தகிடுதத்த வேலைகளை விடுத்து ‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தை செயல்படுத்துக” - பழனிசாமி
பத்திரப் பதிவு தடை நீக்கம்: கரூரில் சர்ச்சையைக் கிளப்பிய முதல்வர் விஜய், எம்.பி. ஜோதிமணி சுவரொட்டிகள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in