

சென்னை: “பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு 3 விதமான கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படுவதாகவும் அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும்” அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.
பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமா படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) பிரகதி, சக்சம், ஸ்வநாத் என 3 விதமான கல்வி உதவித்தொகைகளை (ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம்) வழங்குகிறது.
இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டியது அவசியம். பிரகதி கல்வி உதவித் தொகை பெற மாணவிகளும், சக்சம் உதவித் தொகைக்கு மாற்றுத் தினாளிகளும், ஸ்வநாத் உதவித்தொகை பெற ஆதரவற்ற மாணவர்கள், கரோனாவில் பெற்றோரை இழந்தவர்கள், போரில் இறந்த ராணுவத்தினரின் குழந்தைகள், கொடிய நோய்களால் பாதிக்கப்பட்ட பெற்றோரைக் கொண்ட குழந்தைகள் விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் (2026- 2027) பிரகதி, சக்சம், ஸ்வநாத் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கும், ஏற்கனவே உதவித்தொகை பெற்றும் வரும் மாணவர்கள் புதுப்பிப்பதற்குமான அறிவிப்பை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில் பி.இ, பி.டெக் மற்றும் பொறியியல் டிப்ளமா படிப்புகளில் சேரும் தகுதியுள்ள மாணவ-மாணவிகள் www.scholarships.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி அக்டோபர் 31ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இது தொடர்பான முழு விவரங்களையும் www.aicte.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என ஏஐசிடிஇ உறுப்பினர் செயலர் ஷ்யாமா ரத் தெரிவித்துள்ளார்.