

சென்னை: பிளஸ்-2 படித்து முடித்த ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள், 3 ஆண்டு இளங்கலை ஹோட்டல் மேனேஜ் மென்ட் படிப்புக்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மூலம் பிளஸ்-2 முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்படும் தேசிய ஹோட்டல் மேலாண்மை கவுன்சில் இணை நுழைவுத் தேர்வு மூலமாக, தரமணியில் இயங்கி வரும் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி அண்ட் அப்ளைடு நியூட்ரிஷன் நிறுவனத்தில் 3 ஆண்டு முழு நேர இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பில் சேர்ந்து பயில விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
தேசிய ஹோட்டல் மேலாண்மை கவுன்சில் இணை நுழைவுத் தேர்வு வரும் ஏப்.25-ம் தேதி ஆன்லைன் வாயிலாக நடைபெறவுள்ளது. இத்தேர்வை எழுத மாணவர்கள் மார்ச் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களை அறியவும், முன்பதிவு செய்யவும் http://exams.nta.nic.in/nchm-jee/ என்ற இணையதளத்தை அணுகலாம்.
ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜியில் பயில, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பிளஸ்-2 வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். தாட்கோ மூலமாக படிப்பில் சேர www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
படிப்புக்கான செலவை தாட்கோ ஏற்கும். படிப்புகளை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் மாணவர்களுக்கு நட்சத்திர விடுதிகள், உயர்தர உணவகங்கள், விமானத் துறை, கப்பல் துறை மற்றும் சேவைத் துறை சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிய வழிவகை செய்யப்படும். ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.