5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜேஇஇ முதல்நிலை தேர்வு கட்-ஆப் மதிப்பெண் உயர்வு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள ஐஐடிகளில் இளநிலை பொறியியல் பட்டப் படிப்பில் சேர்வதற்காக ஜேஇஇ அட்வான்ஸ்டு என்ற பெயரில் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க ஜேஇஇ மெயின் எனப்படும் முதல்நிலை தேர்வில் தகுதி பெற வேண்டும்.

அந்த வகையில் வரும் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தேர்வை 11,13,325 பேர் எழுதினர். இதில் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வை எழுதுவதற்கு 2,51,673 பேர் தகுதி பெற்றுள்ளனர். இதில் 2,685 பேர் மாற்றுத் திறனாளிகள். 98,612 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், 67,613 பேர் ஓபிசி, 37,563 பேர் எஸ்.சி., 18,752 பேர் எஸ்.டி., 25,057 பேர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப் பிரிவினர் (இடபிள்யுஎஸ்) ஆவர்.

இந்த ஆண்டு பொதுப் பிரிவினருக்கான கட்-ஆப் மதிப்பெண் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து 90.7 பர்சன்டைல் ஆகி உள்ளது. இது 2022-ல் 88.4, 2021-ல் 88.8,

2020-ல் 90.3 பர்சன்டைலாக இருந்தது. இதுபோல இட ஒதுக்கீடு பிரிவைச் சேர்ந்தவர்களின் கட்-ஆப் மதிப்பெண் 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

குறிப்பாக ஓபிசி பிரிவினருக் கான கட்-ஆப் இந்த ஆண்டு 73.6 பர்சன்டைலாக அதிகரித்துள்ளது. இது 2022-ல் 67, 2021-ல் 68 பர்சன்டைலாக இருந்தது.

கடந்த ஆண்டு 63.1 ஆக இருந்த இடபிள்யுஎஸ் பிரிவினருக்கான கட்-ஆப் இந்த ஆண்டு 75.6 பர்சன்டைலாக அதிகரித்துள்ளது. எஸ்.சி. பிரிவினருக்கான கட்-ஆப் 43-லிருந்து 51.9 ஆக அதிகரித்துள்ளது. எஸ்.டி.பிரிவினருக்கான கட்-ஆப் 26.7-லிருந்து 37.2 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டு களில் மாணவர்களுக்கு இணைய வழியில் பாடம் நடத்தப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் களுக்கு முழுமையாக நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in