Published : 11 Apr 2023 04:48 AM
Last Updated : 11 Apr 2023 04:48 AM

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்.13-ம் தேதி வரை அவகாசம்

சென்னை: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் இன்று முதல் ஏப்.13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா,ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட் - NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்ஸிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

499 நகரங்களில்...: நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி, 2023-24-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 499 நகரங்களில் மே 7-ம் தேதி நேரடி முறையில் நடக்க உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் இத்தேர்வு நடக்கிறது.

நீட் தேர்வுக்கு https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த மார்ச் 6-ம் தேதி தொடங்கி கடந்த ஏப்.6-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், மாணவர்கள், பெற்றோரின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து என்டிஏ மூத்த இயக்குநர் (தேர்வுகள்) சாதனா பராசர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள்ஏப்.11-ம் தேதி (இன்று) முதல் 13-ம் தேதி நள்ளிரவு 11.30 மணி வரை விண்ணப்பிக்கலாம். ஏப்.13-ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x