

சென்னை: முதுநிலை பயோ டெக்னாலஜி படிப்புகளுக்கான கேட்-பி நுழைவுத் தேர்வு ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளதாக என்டிஏ தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை உயிரி தொழில்நுட்பம் படிப்புகளில் (பயோ டெக்னாலஜி) சேருவதற்கு கேட்-பி என்ற தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல், பயோ டெக்னாலஜி துறையில் இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறுவதற்கு மாணவர்கள் பிஇடி என்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியமாகும்.
இந்த தேர்வுகள் ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை(என்டிஏ) சார்பில் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நடப்பாண்டுக்கான கேட்-பி மற்றும் பிஇடி தேர்வு ஏப்ரல் 23-ம் தேதி கணினி வழியில் நடத்தப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் dbt.nta.ac.in என்ற இணையதளம் வழியாக மார்ச் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுக் கட்டணமாக பொதுப் பிரிவுக்கு ரூ.1,200-ம், எஸ்சி/எஸ்டிபிரிவினர் ரூ.600-ம் செலுத்த வேண்டும். தேர்வுக்கான பாடத்திட்டம், தகுதிகள், வழிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை http://www.nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. கடந்தாண்டும் ஏப்ரல் 23-ம் தேதியில்தான் கேட்-பி மற்றும் பிஇடி தேர்வுகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.