Published : 05 Mar 2023 04:45 AM
Last Updated : 05 Mar 2023 04:45 AM

நாடு முழுவதும் 600 மையங்களில் முதுநிலை மருத்துவ படிப்புக்கு இன்று நீட் தேர்வு - 1.60 லட்சம் மருத்துவர்கள் பங்கேற்பு

சென்னை: நாடு முழுவதும் 600 மையங்களில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடக்கிறது. எம்பிபிஎஸ் முடித்த1.60 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவ பட்ட மேற்படிப்புகளான எம்.டி.,எம்.எஸ். மற்றும் டிப்ளமா படிப்புகளுக்கு தமிழகத்தில் சுமார் 4 ஆயிரம் இடங்கள் உட்பட நாடு முழுவதும் 42,500 இடங்கள் உள்ளன. தேசிய தகுதி, நுழைவுத் தேர்வில் (NEET - நீட்) தகுதி பெறுபவர்களை கொண்டு இந்த இடங்கள் நிரப்பப்படுகின்றன. இத்தேர்வை தேசிய தேர்வுகள் வாரியம் (என்டிஏ) நடத்துகிறது.

2023-24-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு https://nbe.edu.in மற்றும் https://www.natboard.edu.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிப்பது கடந்த ஜன.7-ம்தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி, 27-ம் தேதி நள்ளிரவு 11.55 மணியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உட்படநாடு முழுவதும் 271 நகரங்களில் 600-க்கும் மேற்பட்ட மையங்களில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆன்லைனில் நடைபெற உள்ளது.

தேர்வு எழுதுவோர் காலை 7 மணிக்கு தேர்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும். தமிழகத்தில் எம்பிபிஎஸ் முடித்த சுமார் 25 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 1.60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு முடிவு வரும் 31-ம் தேதிவெளியிடப்பட உள்ளது. மேலும்விவரங்களுக்கு இணையதளங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு: நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகிலஇந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இந்த இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள், மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள இடங்களுக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) www.mcc.nic.in என்ற இணையதளத்தில் கலந்தாய்வு நடத்துகிறது.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, எஞ்சியுள்ள 50 சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாநில அரசுகள் கலந்தாய்வு நடத்துகின்றன.

தமிழகத்தில் மட்டும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். படிப்புகளுக்கு உள்ள 2,100 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 1,050 இடங்கள் (50 சதவீதம்) ஒதுக்கப்படுகின்றன. எஞ்சிய 1,050 இடங்களில் 50 சதவீத இடங்கள் கலந்தாய்வில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x