Published : 25 Feb 2023 04:36 AM
Last Updated : 25 Feb 2023 04:36 AM

பெங்களூருவில் 30 நாள் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி - தொடக்கக்கல்வித் துறை அறிவிப்பு

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பெங்களூருவில் 30 நாட்கள் ஆங்கில மொழிப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தொடக்கக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர, வெளி முகமைகள் மூலமும் அவ்வப்போது ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

அந்தவகையில், அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆங்கிலப் பாட ஆசிரியர்களுக்கு பெங்களூருவில் உள்ள, தென்னிந்திய மண்டல ஆங்கில மொழிப் பயிற்சி நிறுவனம் மூலம் சான்றிதழ் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

இந்த பயிற்சி வகுப்பு மார்ச் 1 முதல் 30-ம் தேதி வரை 30 நாட்கள் நடைபெறும். பயிற்சியை முடிக்கும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இதில் கலந்து கொள்வதற்காக 75 ஆங்கிலப் பாட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், திருநெல்வேலி, வேலூர், தஞ்சாவூர், விழுப்புரம், ஈரோடு, திருவண்ணாமலை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய 13 மாவட்டங்களில் இருந்து 30 பேர் எஞ்சிய பகுதிகளில் இருந்து கல்வி மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 45 பேர் என மொத்தம் 75 பேரைத் தேர்வு செய்து, பட்டியலை இயக்குநரகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

இந்தப் பயிற்சியை சிறந்த முறையில் நடத்தி முடிக்கத் தேவையான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளும் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x