Published : 14 Nov 2022 06:18 AM
Last Updated : 14 Nov 2022 06:18 AM

பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு 60,000 இடங்கள் காலியாக இருக்கும்; மாணவர் சேர்க்கை 4 சதவீதம் உயர்வு

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், 93,027 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். இந்த ஆண்டு சுமார் 60 ஆயிரம் இடங்கள் காலியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 446 பொறியியல் கல்லூரிகளில் நடப்பு (2022-23) கல்வி ஆண்டில் 2 லட்சத்து 7,996 இடங்களில் சேர்க்கை நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதில் இருந்த 1 லட்சத்து 54,278 அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கான பணிகளை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மேற்கொண்டது. இதற்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 20-ல் தொடங்கி நவம்பர் 10-ம் தேதியுடன் முடிந்தது.

மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் பங்கேற்ற 2,431 மாணவர்களில் 610 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் 377 பேர் கல்லூரிகளில் சேர்ந்தனர். பொதுப் பிரிவு கலந்தாய்வு முதல் சுற்றில் 10,017 மாணவர்களுக்கு சேர்க்கை இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் 9,340 பேர் கல்லூரிகளில் சேர்ந்தனர். 2-வது சுற்றில் 18,520 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டதில் 17,650 பேரும், 3-வது சுற்றில் கல்லூரிகள் ஒதுக்கப்பட்ட 24,727 பேரில் 23,450 பேரும், 4-வது சுற்றில் 30,938 பேருக்கு இடங்கள் வழங்கப்பட்டதில் 26,409 பேரும் கல்லூரியில் சேர்ந்தனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 8,759 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. அதில் 7,797 பேர் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

அதன்படி, மொத்தம் உள்ள 1 லட்சத்து 54,278 இடங்களில் 93,571 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் 85,023 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 69,255 இடங்கள் காலியாக உள்ளன. எனினும், சேர்க்கை விகிதம் கடந்த ஆண்டைவிட 4 சதவீதம் (89,187) வரை உயர்ந்துள்ளது. எஞ்சியுள்ள இடங்களை நிரப்புவதற்கான துணை கலந்தாய்வு இம்மாத இறுதியில் நடக்க உள்ளது. எஸ்.சி. பிரிவிலும் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அந்த வகையில், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருக்கும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x