Published : 07 Jun 2022 05:41 AM
Last Updated : 07 Jun 2022 05:41 AM

மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட்’ அட்டை வழங்கும் வரை பழைய அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணிக்கலாம் - அமைச்சர் தகவல்

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு புதிய ‘ஸ்மார்ட்’ அட்டை வழங்கப்படும் வரை பழைய பயண அட்டையைப் பயன்படுத்தி பேருந்தில் பயணிக்கலாம் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

தமிழகத்தில் ஜூன் 13-ம் தேதி அரசுப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில், மாணவர்களுக்கான இலவச பயண அட்டை குறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியதாவது:

பள்ளி மாணவர்களுக்கான இலவசப் பேருந்து பயணத்துக்கு ‘ஸ்மார்ட்’ அட்டை வழங்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் அனைத்து மாணவர்களுக்கும் ‘ஸ்மார்ட்’ அட்டை வழங்கப்படும். அதுவரை அவர்கள் பழைய பயண அட்டையைப் பயன்படுத்தி பேருந்துகளில் பயணிக்கலாம்.

பள்ளி வாகனங்களின் முன்புறமும், பின்புறமும் கண்காணிப்பு கோமராக்கள் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்ததும் முழுமையாக இதுகுறித்து கண்காணிக்கப்படும். மண்டல போக்குவரத்து அதிகாரிகள் பேருந்துகளில் சோதனை நடத்துவார்கள்.

இ-டிக்கெட்

பேருந்துகளில் வழங்கப்படும் பயணச்சீட்டுக்குப் பதில் இ-டிக்கெட் வழங்கும் நடைமுறையை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பின், ஜிபே, கைபேசி ஸ்கேனிங் முறையைப் பயன்படுத்தி பயணச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘பெண்கள் இலவசமாகச் செல்லும் பேருந்துகளை முழுமையாக இயக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து இதை கண்காணித்து வருகிறோம். நீண்ட நாட்களாகப் பணிக்கு வராதவர்களை, அந்தந்த பணிமனைக்குச் சென்று பார்த்து, அவர்களை பணிக்கு வர அறிவுறுத்தியுள்ளோம். இதுவரை 25 பணிமனைகளில் 385 பேரைச் சந்தித்து அழைப்பு விடுத்து, பாதிக்கு மேல்வந்துவிட்டனர். மீதமுள்ளவர்களையும் பணிக்கு திருப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ரூ.48,500 கோடி கடன்

அதிமுக ஆட்சியில்தான் போக்குவரத்து ஊழியர்களுக்கான நிலுவை அதிகம் இருந்தது. போக்குவரத்துத் துறையில் ரூ.48 ஆயிரத்து 500 கோடி கடன் உள்ளது. மத்தியஅரசு டீசல் விலையை உயர்த்தியுள்ள சூழலிலும், பேருந்து கட்டணத்தை உயர்த்தாமல், பெண்கள், மாணவர்களுக்கு இலவச பேருந்து சலுகை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x