Published : 05 Jun 2022 04:00 AM
Last Updated : 05 Jun 2022 04:00 AM

கடலூர் | அரசு இசைப் பள்ளியில் சேர விருப்பமா? - ஆண்டுக்கு ரூ.350 மட்டுமே கட்டணம்

கடலூர்

கடலூர் பழைய மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள, ‘பழைய மாவட்ட பத்திரப் பதிவு அலுவலக கட்டிடம், சப்-ஜெயில் ரோடு, கடலூர்-1’ என்ற முகவரியில் அரசு இசைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு குரலிசை (வாய்ப்பாட்டு), நாகஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் முதலிய 7 கலைகளின் மூன்றாண்டு சான்றிதழ் பயிற்சி முழுநேரமாக பயிற்றுவிக்கப்படுகிறது. இசைப்பள்ளியில் சேர ஆண்டு ஒன்றுக்கு ரூ.350 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வயது வரம்பு 13 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு சிறப்புச் சலுகைகள்

கடலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2022-23-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வரின் ஆணையின்படி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாதம் தோறும் கல்வி உதவித் தொகை ரூ,400, 2012-13-ம் நிதியாண்டு முதல் வழங்கப்படுகிறது.

மேலும், மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை, அரசு விடுதி வசதி, சலுகைக் கட்டணத்தில் புகைவண்டி பயண வசதி ஆகிய வசதிகள் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.

கடலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மூன்றாண்டு சான்றிதழ் படிப்பு நிறைவு செய்த மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் அரசுத் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படுகிறது. முன்னரே மாவட்ட அரசு இசைப்பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குரலிசை ஆசிரியர்களாகவும், பரதநாட்டிய ஆசிரியர் களாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக இசைப்பள்ளிகளில் ஆசிரியர்களாகவும், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் நாகஸ்வர கலைஞராகவும், தவில் கலைஞராகவும், தேவார ஓதுவார் முதலிய பணிகள் பெற்றிடவும் அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன. மேலும், மாணவர்கள் இசைக்கச்சேரி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றும், பகுதி நேரமாக இசை மற்றும் பரதநாட்டியம் வகுப்புகள் நடத்துவதன் வாயிலாக சுயதொழில் முனைபவர்களாக செயல்பட்டு, பொருளாதார அடிப்படையிலும் முன்னேற்றம் அடையது வருகின்றனர்.

எனவே இசை ஆர்வமுள்ள மாணவர்கள் கடலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் சேர்ந்து பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் கேட்டுக்கொண்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x