

பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ முதன்மை தேர்வு ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான கால அட்டவணையை என்டிஏ வெளியிட்டுள்ளது.
ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இது ஜேஇஇ முதன்மை தேர்வு, பிரதான தேர்வு என 2 பிரிவாக நடைபெறுகிறது. இதில் முதன்மை தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தி வருகிறது. அதன்படி, 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு ஜனவரி 22 முதல் 30-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த அக்டோபர் 28-ம் தேதி தொடங்கி நவம்பர் 22-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தேர்வு எழுத ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், எந்தெந்த நாளில் தேர்வுகள் நடைபெறும் என்ற விரிவான கால அட்டவணையை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, பிஇ, பிடெக் படிப்புக்கான முதல் தாள் தேர்வு ஜனவரி 22, 23, 24, 28, 29-ம் தேதிகளில் காலை, மாலை என இரு வேளையாக நடத்தப்படும். அதேபோல், பிஆர்க், பி.பிளானிங் படிப்புக்கான 2-ம் தாள் தேர்வு ஜனவரி 30-ம் தேதி மாலை நடைபெற உள்ளது.
இதுபற்றிய விவரங்களை jeemain.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும். இதன் முடிவுகள் பிப்ரவரி 12-ம் தேதி வெளியிடப்படும். ஹால் டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட இதர தகவல்கள் பின்னர் வெளியிடப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை nta.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம். மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், 011-40759000/69227700 என்ற தொலைபேசி எண் அல்லது jeemain@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.