தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. 15-வது பட்டமளிப்பு விழா: 106 மாணவர்களுக்கு ஆளுநர் தங்க பதக்கம் வழங்கினார்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை. 15-வது பட்டமளிப்பு விழா: 106 மாணவர்களுக்கு ஆளுநர் தங்க பதக்கம் வழங்கினார்

Published on

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பல்வேறு படிப்புகளில் முதலிடம் பிடித்த 106 மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, தங்க பதக்கங்களை வழங்கினார்.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 15-வது பட்டமளிப்புவிழா பல்கலைக்கழக கூட்டரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்த 106 மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதக்கங்களையும் பட்டங்களையும் வழங்கினார். மேலும், 2-ம்,3-ம் இடம் பிடித்தவர்களுக்கும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

திருக்கழுக்குன்றம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ தனபால் உட்பட 18 பேர் பிஎச்.டி பட்டம் பெற்றனர். காமன்வெல்த் கல்விக்கழக ஊடக மையத்தின் விருது மற்றும் ரொக்கப்பரிசு ரூ.25 ஆயிரம்,எம்சிஏ மாணவி எஸ்.லதாவுக்கு வழங்கப்பட்டது. மேலும் கேபிஆர்அறக்கட்டளை விருதுகளை எம்.எஸ்சி உளவியல் மாணவிகள் திவ்யா, ஸ்ரீலட்சுமி, எம்எஸ்டபிள்யூமாணவி சோனா, எம்.ஏ. பொருளாதாரம் மாணவி தேவி, எம்.ஏ சமூகவியல் மாணவி பாஸியா பேகம், பிஎஸ்சி உயிரி-வேதியியல் மாணவிரேணுகா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இந்த பட்டமளிப்பு விழா வாயிலாக இளங்கலை, முதுகலை பட்டம் மற்றும் பட்டய படிப்புகளில் மொத்தம் 6,940 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலைக்கழக (இக்னோ) முன்னாள் துணைவேந்தர் நாகேஸ்வர் ராவ் பட்டமளிப்புவிழா உரையாற்றி பேசும்போது, "வரும் காலத்தில் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், தானியங்கி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் முக்கிய இடங்களை வகிக்கும். எனவே, மாறிவரும் சூழலுக்கு ஏற்ப புதியதொழில்நுட்பங்களையும், புதியவிஷயங்களையும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் உடையவர்களாக மாணவர்கள் இருக்க வேண்டும். கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, துணைவேந்தர் எஸ்.ஆறுமுகம் வரவேற்று ஆண்டறிக்கை சமர்ப்பித்தார். விழாவில், பதிவாளர் ஜி.ஆர்.செந்தில்குமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் எஸ்.உமாமகேஸ்வரி, பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

உயர்கல்வி அமைச்சர் புறக்கணிப்பு: பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கோவி.செழியன் பங்கேற்று சிறப்பிப்பார் என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர் பங்கேற்கவில்லை. கடந்த சில தினங்களுக்கு முன்பு டிடிதமிழ் தொலைக்காட்சி நிலையத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இந்தி மாத கொண்டாட்ட நிகழ்ச்சி நிறைவு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான பிரச்சினையில் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மீண்டும் மோதல்போக்கு ஏற்பட்டது. இந்த சூழலில் திறந்தநிலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in