Published : 23 Apr 2024 06:05 AM
Last Updated : 23 Apr 2024 06:05 AM

25% இடஒதுக்கீடு இடங்கள் தனியார் பள்ளிகளில் சேர ஆன்லைன் பதிவு தொடங்கியது: மே 20-ம் தேதி கடைசி தனியார் பள்ளிகநாள்

சென்னை: தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. இதற்காக விண்ணப்பிக்க மே 20-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் (சிறுபான்மையினர் பள்ளிகள் நீங்கலாக) தொடக்கநிலை வகுப்புகளில் (எல்கேஜி மற்றும் முதல் வகுப்பு) ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இந்த இடங்களில் சேரும் குழந்தைகளுக்கான கல்வி கட்டணத்தை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்துக்கு அரசே செலுத்திவிடும்.

எல்கேஜி, முதல் வகுப்பில்... இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில் (2024-2025) 25 சதவீத இடஒதுக்கீட்டில் உள்ள இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் (https://rte.tnschools.gov.in) விண்ணப்ப பதிவு ஏப்ரல் 22 முதல் மே 20 வரை நடைபெறும் என தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அறிவித்திருந்தது.

எல்கேஜி வகுப்பில் சேருவதற்கு, குழந்தைகள் 2020 ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 2021 ஜூலை 31-ம் தேதிக்குள்ளும், முதல் வகுப்பில் சேர விரும்பும் குழந்தைகள் 2018 ஆகஸ்ட் 1 முதல், 2019 ஜூலை 31-ம்தேதிக்குள்ளும் பிறந்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, 25 சதவீத இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம், மாவட்டகல்வி அதிகாரி அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம், வட்டார வள மையம் ஆகிய இடங்களிலும் பெற்றோர் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெற்றோர் தங்கள் வீடுகளில் இருந்து ஒரு கிலோ மீட்டருக்கு உட்பட்டு அமைந்திருக்கக்கூடிய தனியார் பள்ளிகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள பெற்றோரின் குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் உரிய சான்றுகளுடன் மே 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

குலுக்கல் முறையில் சேர்க்கை: ஆன்லைனில் விண்ணப்பப்பதிவு வெற்றிகரமாக முடிந்ததும், பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். குறிப்பிட்ட பள்ளியில் 25 சதவீத ஒதுக்கீட்டுக்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்படும் பட்சத்தில் மே 28-ம் தேதி குலுக்கல் முறையில் சேர்க்கை வழங்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x