Published : 09 Feb 2024 05:23 AM
Last Updated : 09 Feb 2024 05:23 AM

பொதுத் தேர்வு பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்; தனியார் பள்ளி ஆசிரியர்களை கண்காணிப்பாளர்களாக நியமிக்கக் கூடாது - தேர்வுத் துறை

சென்னை: பொதுத் தேர்வு பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதில் தனியார் பள்ளி ஆசிரியர்களை முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

பள்ளிகளில் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்குகின்றன. அதன்படி பிளஸ்-1 தேர்வு மார்ச் 1-ம் தேதியும், பிளஸ்-2 தேர்வு மார்ச் 4-ம் தேதியும், 10-ம் வகுப்பு மார்ச் 26-ம் தேதியும் தொடங்கி, ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகின்றன. இந்நிலையில் அரசு தேர்வுத் துறை சார்பில் பொதுத் தேர்வு பணிகள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 200-க்கும்மேற்பட்ட வினாத்தாள், விடைத்தாள் பாதுகாப்பு மையங்களை சரியாக வைத்திருக்க வேண்டும். அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அமைத்திருக்க வேண்டும்.

பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் வினாத்தாள் கசிந்தால், அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும். தேர்வு மையங்களுக்கு அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களையோ, தனியார் பள்ளிகளின் முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்களையோ முதன்மை கண்காணிப்பாளராக நியமனம் செய்யக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குலுக்கல் முறையில் தேர்வு: மேலும் தேர்வு மையத்துக்கு நியமிக்கப்படும் முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் ஒரே பள்ளியை சேர்ந்தவர்களாக இருக்கக்கூடாது. அறை கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் தினத்தன்று சம்பந்தப்பட்ட பாடத்தை போதிக்கும் ஆசிரியராக இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அறை கண்காணிப்பாளர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுதவிர கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் விடைத்தாள் திருத்தும் பணியில் சரியாக பணியாற்றாத 1,000 ஆசிரியர்களை அடையாளம் கண்டு அரசு தேர்வுத்துறை, அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித் துறைக்குபரிந்துரைத்திருந்தது. அவர்கள்இந்த ஆண்டுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் தேர்வு நடைபெறும் தினத்தன்று சம்பந்தப்பட்ட பாடத்தை போதிக்கும் ஆசிரியராக இல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x