Published : 13 Dec 2023 10:50 AM
Last Updated : 13 Dec 2023 10:50 AM

திருப்பூரில் பள்ளிகளுக்கு அருகே போதை பொருட்கள் விற்பதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

கோப்புப் படம்

திருப்பூர்: திருப்பூர் மாநகரில் பள்ளிக்கு அருகிலேயே போதைப் பொருட்கள் விற்கப்படுவதாகவும், இதனால் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. திருப்பூர் மாநகரை சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: திருப்பூர் மாநகரில் எந்தளவுக்கு தொழில் வளர்ந்து வருகிறதோ, அந்தளவுக்கு குற்றங்களுக்கு துணைபுரியும் பிற சம்பவங்களும் வளர்ந்து கொண்டே உள்ளன. பள்ளி அருகிலேயேபோதைப்பொருட்கள் விற்கப்படுகின்றன. இதுதொடர்பாக போலீஸாரிடம் புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால், மேல்நிலைப்பள்ளி மாணவர்களிடம் மொத்தமாக போதைப்பொருட்களை தந்து, அந்த மாணவர்களை பள்ளிக்குள் விற்பனை பிரதிநிதிகளாக சில கடைக்காரர்கள் மாற்றிய சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.

பள்ளி மாணவர்களிடம் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு புகையிலைப் பொருட்கள், போதை பாக்குகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அழித்தோம். சிலரின் சுய லாபத்துக்காக மாணவர் சமுதாயம் சீரழிந்து வருகிறது. பெற்றோர் மீட்டிங் வைத்தால் பல பெற்றோர் வருவதே இல்லை. ஒரு கட்டத்தில் மாணவர்களுக்கான பிரச்சினை முற்றும்போதுதான் பெற்றோர் பள்ளிக்கு வருகின்றனர். வீட்டில் பெற்றோரின் கண்காணிப்புஇல்லாததால், மாணவர்கள் தவறான பாதைக்கு செல்கின்றனர்.எனவே அவரவர் குழந்தைகளை பெற்றோர் கண்காணித்து, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும், என்றனர்.

இதுதொடர்பாக முன்னாள் கவுன்சிலர் என்.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: திருப்பூர் மாநகரில் உள்ள ஒருசில பள்ளிகளில்மாணவர்கள் போதைப்பொருட்களை உட்கொண்டு, வகுப்பில்அமர்ந்திருப்பதை காணமுடிகிறது. இதுபோன்ற சம்பவங்களால் ஆசிரியர்கள்-மாணவர்கள் மோதலும் அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் திருப்பூர் மாநகரில்பள்ளி மாணவர்களிடையே போதை பழக்கம் அதிகரித்து வருவதாகவும், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடம் பேசி, எந்தெந்த இடங்களில் போதைப்பொருட்கள் விற்கப்படுகிறது என்பதை அறிந்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் காவல் துறை உயர்அதிகாரி ஒருவர் பேசியுள்ளார். எனவே, போதைப்பொருட்கள் விற்பனை குறித்து ஆசிரியர்களிடம், மாணவர்கள் தெரிவிக்கவேண்டும். எதிர்கால சமுதாயத்தைகாக்கும் வகையில் பள்ளி அருகேபோதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோரை கண்காணித்து, போலீஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x