Published : 17 Oct 2023 02:19 PM
Last Updated : 17 Oct 2023 02:19 PM

கோவளம் அரசு பள்ளி அருகே குப்பை கிடங்கு: துர்நாற்றத்தில் பள்ளி... கேள்விக்குறியாகும் கல்வி!

கோவளம்: கோவளம் அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தின் அருகே உள்ள குப்பை கிடங்கால், துர்நாற்றத்துக்கு மத்தியில் கல்வி பயின்று வரும் மாணவர்கள், தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ உங்கள் குரலில் வாசகர் ஒருவர் கூறியது: செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்குகோவளம், திருவிடந்தை, முட்டுக்காடு, கானத்தூர், வடநெம்மேலி உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 900 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். பள்ளியின் வளாகத்தை ஒட்டி, கோவளம் ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி வருகிறது. இதனால், பள்ளி வளாகத்தின் பின்புறம் குப்பை மேடாக காட்சியளிக்கிறது.

இதனால், கொசுத் தொல்லை, மூச்சுத்திணறல் மற்றும் துர்நாற்றத்தால் மாணவர்கள், ஆசிரியர்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். அது மட்டுமின்றி, மாணவர்களுக்கு நோய்த்தொற்று பரவி வருகிறது. தினமும் குறைந்தபட்சம் 50 மாணவர்கள் உடல் நல குறைவு காரணமாக பள்ளிக்கு வரமுடியாத சூழல்ஏற்படுகிறது.

எந்த நேரமும் துர்நாற்றம் வீசி வருவதால், மாணவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்பட்டு, பாடத்தில் கவனம் செலுத்த முடியாத நிலையுள்ளது. மேலும் சில மாணவர்கள் அவ்வப்போது வாந்தி, தலை சுற்றல், தலை வலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, பள்ளி நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் கிராம சபை கூட்டத்திலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும், இதுவரை எந்த மாற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பள்ளிக்கு அருகே குப்பை கொட்டுவதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பள்ளி அருகில் கொட்டப்படும் குப்பை.

இதுதொடர்பாக ஆசிரியர்கள் கூறியதாவது: வகுப்பறையில் பாடம் நடத்த முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மாணவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு வகுப்பறையில் அமர்ந்துள்ளனர். மதிய வேளையில் சாப்பிட முடியாத அளவுக்கு குமட்டல் ஏற்படுகிறது.

பள்ளி நேரங்களில் வகுப்பறை ஜன்னல்களை மூடி வைத்தாலும், காற்று வீசும்போது அதிக துர்நாற்றம் வீசுகிறது. ஈக்கள் அதிகம் உற்பத்தியாகி உள்ளது. குப்பைக் கிடங்கில் கிருமி நாசினியும் தெளிப்பதில்லை. இதனால், தொற்று நோய் பரவி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் குறைந்த பட்சம் 50 மாணர்களுக்கு மேல் உடல்நிலை சரியில்லை என விடுப்பு எடுக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து திருப்போரூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள் தேவியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: கோவளம் அரசு பள்ளியில் பள்ளி அருகே பல ஆண்டுகளாக குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாக பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர் சார்பிலும் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு தீர்வு காணும் வகையில் வருவாய் துறையினரிடம் வேறு இடம் ஒதுக்கித் தரும்படி கேட்டிருக்கிறோம். ஆனால் இன்னும் வருவாய் துறைஎங்களுக்கு இடம் ஒதுக்கவில்லை. ஊராட்சியில் சேகரமாகும் குப்பைகளில், பெரும்பகுதி சேர்ந்தவுடன் கொளத்தூருக்கு கொண்டு செல்லப்படுகிறது. குப்பை பள்ளி அருகே தேக்கி வைக்காமல் உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து வேதனை தெரிவித்த பொதுமக்கள், "ஒவ்வொரு முறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கும்போதும், குப்பைகள் அகற்றப்படும், வருவாய்த் துறையினரின் ஒத்துழைப்பு இல்லை, ஊராட்சி நிர்வாகத்திடம் குப்பைகளை தேக்கி வைக்கக் கூடாது என அறிவித்திருக்கிறோம் என பதிலையே அவர்கள் தெரிவித்து வருகின்றனர். மாணவர்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x