Published : 07 Oct 2023 05:50 AM
Last Updated : 07 Oct 2023 05:50 AM

தமிழகத்தில் 3, 6, 9-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிட ‘எஸ்இஏஎஸ்’ தேர்வு: மாநிலம் முழுவதும் நவ.3-ல் நடக்கிறது

கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் 3, 6, 9-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக ‘எஸ்இஏஎஸ்’ எனும் திறனறித் தேர்வு பள்ளிக்கல்வித் துறையால் நவ.3-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 7.42 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர்.

நாடு முழுவதும் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக தேசிய சாதனை ஆய்வு (National Achievement Survey-NAS) தேர்வு மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. இந்த தேர்வு 3, 5, 8, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறைநடைபெறும். இதன்மூலம் மாணவர்களின் கற்றல் திறன் கண்டறியப்பட்டு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடப்பாண்டில் மாநில கல்வி சாதனை ஆய்வு -2023 (State Educational Achievement Survey-SEAS) தேர்வு நவ.3-ம் தேதி நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வை 7 லட்சத்து 42,743 மாணவர்கள் எழுதவுள்ளனர். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத்திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழகத்தில் உள்ள அனைத்துமாவட்டங்களிலும் 3, 6 மற்றும் 9-ம்வகுப்புள்ள 27,047 பள்ளிகள் மற்றும் அதில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறன் பரிசோதனைசெய்யப்பட உள்ளது. இதற்காகமாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் நியமிக்கப்படுவார்கள்.

இதுதவிர 29,775 கள ஆய்வாளர்களை அடையாளம் கண்டு அவர்கள் மூலம் இந்த மாநில கல்வி சாதனை ஆய்வை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய கள ஆய்வாளர்கள், மாவட்ட ஆசிரியர் கல்விமற்றும் பயிற்சி நிறுவன பயிற்சியாளர்கள், பி.எட், எம்.எட் மற்றும் கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு இந்த ஆய்வுக்கான பயிற்சி தரப்படும்.

அதேபோல், வட்டார அளவிலும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அதன்படி 20 பள்ளிகளுக்கு ஒருவர் வீதம் மொத்தம்1,356 பேர் வட்டார ஒருங்கிணைப்பாளர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். இதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றி... மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில், பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை அளவிட மாநிலங்கள் அளவில் பிரத்யேகமாக கள ஆய்வு (State Achievement Survey-SAS) நடத்தப்பட வேண்டும் என்ற அம்சமும் இடம் பெற்றுள்ளது. அந்த தேர்வைத்தான் வேறு பெயரில் தமிழக பள்ளிக்கல்வித் துறை தற்போது நடத்தவுள்ளது.

தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்த்தாலும், அதிலுள்ள சாராம்சங்களை வெவ்வேறு பெயரில் அமல்படுத்தி வருவதாக ஆசிரியர்கள், கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் ஏற்கெனவே மாணவர்களுக்கு விநாடி வினா போட்டி நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x