Published : 17 Aug 2023 06:17 AM
Last Updated : 17 Aug 2023 06:17 AM

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆக.21 முதல் நேரடி சேர்க்கை - மாணவர்களுக்கு அழைப்பு

சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 9,820 காலியிடங்களை நிரப்புவதற்கான நேரடி சேர்க்கை ஆக. 21-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 11,300 இடங்கள் உள்ளன. இதில் சேர இந்தாண்டு 2.46 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அதில் தகுதியான மாணவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு கடந்த மே 29-ல் தொடங்கி ஜூலை மாத இறுதி வரை நடைபெற்றது.

9,820 இடங்கள் காலி: அதன்மூலம் இளநிலை படிப்புகளில் மொத்தம் ஒரு லட்சத்து 416 இடங்கள் மட்டுமே நிரம்பின. இன்னும் 9,820 இடங்கள் நிரம் பாமல் காலியாக உள்ளன. இவற்றை நேரடி சேர்க்கை மூலம் நிரப்புவதற்கு உயர்கல்வித்துறை தற்போது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து உயர்கல்வித் துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

இணையதளத்தில் அறியலாம்: ‘அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான நேரடி மாணவர் சேர்க்கை ஆக.21 முதல் நடத்தப்பட உள்ளது. நிரம்பாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். எனவே, இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இதுவரை உயர்கல்வியில் சேராதவர்கள், துணைத் தேர்வில் வெற்றி பெற்றமாணவர்கள் விரும்பும் கல்லூரிகளில் நேரடியாக சென்று சேர்ந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x