Published : 30 Jul 2023 04:49 AM
Last Updated : 30 Jul 2023 04:49 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வில் இடம் தேர்வு செய்ய ஆக.3 வரை அவகாசம்

சென்னை: அகில இந்திய கலந்தாய்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசு நடத்தும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வில் இடங்களைத் தேர்வுசெய்ய ஆக.3-ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023-24-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு கடந்த 25-ம்தேதி www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய சுகாதாரத்துறை இணையதளங்களில் தொடங்கியது.

அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அந்தந்த தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றவர்கள், ஜூலை 25-ம் தேதி காலை 10 மணி முதல் 31-ம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, இடங்களைத் தேர்வு செய்யலாம். ஆகஸ்ட் 1, 2-ம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆக.3-ம் தேதி இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும். ஆக.4-ம் தேதி முதல் 8-ம் தேதிமாலை 5 மணி வரை இடஒதுக்கீட்டு ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆக.8-ம் தேதி மாலை 5 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேரவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அகில இந்திய கலந்தாய்வு: தற்போது, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல் சுற்று கலந்தாய்வு ஆன்லைனில் கடந்த 20-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம்ஏற்பட்டுள்ளது. அகில இந்தியகலந்தாய்வில் இடம் கிடைக்காதவர்கள், மாநில கலந்தாய்வில் இடங்களைப் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. அதனால், தமிழக மாணவர்களின் நலன் கருதி ஆன்லைனில் நடைபெற்று வரும் மாநில கலந்தாய்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஆக.3-ம் தேதி மாலை 5 மணி வரை பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, இடங்களைத் தேர்வுசெய்யலாம். ஆக.4, 5-ம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். ஆக.6-ம் தேதி இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும்.

ஆக.7-ம் தேதி முதல் 11-ம்தேதி மாலை 5 மணி வரை இடஒதுக்கீட்டு ஆணையை இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆக.11-ம் தேதி மாலை 5 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x