Published : 14 Jul 2023 04:40 AM
Last Updated : 14 Jul 2023 04:40 AM

பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தாமதம் - மாணவர்கள், பெற்றோர் தவிப்பு

சென்னை: பிளஸ் 2 அசல் மதிப்பெண் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மாணவர், பெற்றோர் தவிப்பில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வியில் 2022-23-ம் கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை 7.55 லட்சம் மாணவர்கள் எழுதினர். அவர்களுக்கான முடிவுகள் மே 8-ம்தேதி வெளியானது. தொடர்ந்து தேர்வெழுதிய மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் மே 12-ம் தேதி முதல் வழங்கப்
பட்டது. அந்த சான்றிதழை கொண்டு மாணவர்கள் உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்து வருகின்றனர்.

அசல் சான்றிதழ்: அதேநேரம் வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களின் பல்கலை.களில் சேரும் மாணவர்களுக்கு குறிப்பிட்ட காலஅவகாசத்துக்குள் அசல் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகி 2 மாதங்களாகியும் இதுவரை அசல் மதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படும் என்ற தகவலை தேர்வுத்துறை வெளியிடவில்லை. இதனால் ஏராளமான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘ வழக்கமாக பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான ஒரு மாதத்துக்குள் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுவிடும். ஆனால், இந்தாண்டு பல்வேறு காரணங்களால் அச்சிடுதல் பணிகள் சுணக்கமடைந்துவிட்டன. இதனால் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தற்போது பணிகளை முடுக்கிவிட அச்சகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x