Last Updated : 16 Jun, 2023 07:51 PM

 

Published : 16 Jun 2023 07:51 PM
Last Updated : 16 Jun 2023 07:51 PM

தேர்ச்சி 100%... ஆனால் கட்டிட வசதியின்றி மாணவர்கள் தவிப்பு - இது காரைக்குடி பள்ளி அவலம்!

காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் இடநெருக்கடியில் அமர்ந்துள்ள மாணவர்கள்.

காரைக்குடி: காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளியில் போதிய கட்டிட வசதி இல்லாததால் மாணவர்கள் இடநெருக்கடியில் மாணவர்கள் தவித்து வருகின்றனர். மேலும் 6-ம் வகுப்புக்கான புதிய சேர்க்கையும் நிறுத்தப்பட்டதால் பெற்றோர் ஏமாற்றமடைந்தனர்.

காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளி 2013-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது 55 ஆசிரியர்களுடன் 1,600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால் இப்பள்ளியில் போதிய கட்டிட வசதி இல்லை. இதனால் இடநெருக்கடியாக அமர்ந்து மாணவர்கள் படிக்கும் நிலை உள்ளது. அதேபோல் மாணவர்களுக்கு ஒரு கழிப்பறையும், மாணவிகளுக்கு 2 கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. மைதான வசதி இல்லை. எனினும் இப்பள்ளி தொடர்ந்து 10-ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து வருகிறது.

இதனால், அப்பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க பெற்றோரிடம் போட்டி நிலவுகிறது. ஆனால், கட்டிட வசதியை காரணம் காட்டி ஒவ்வொரு ஆண்டும் குறைவான மாணவர்களே சேர்த்து கொள்ளப்படுகின்றனர். இந்தாண்டு 6-ம் வகுப்புக்கு 400-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தநிலையில், 220 பேர் மட்டுமே புதிதாக சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும், இப்பள்ளியில் 5 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால் இக்கட்டிடம் தொடங்கி பல மாதங்களாகியும் பாதியளவு பணி கூட முடியவில்லை.

பல மாதங்களாக கட்டப்படாமல் உள்ள 5 வகுப்பறைகள் கொண்ட பள்ளி கட்டிடம்

இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறும்போது, “இப்பள்ளியில் கல்வி கற்பித்தல் சிறப்பாக இருப்பதால்தான் எங்களது குழந்தைகளை சேர்த்துள்ளோம். ஆனால், இடநெருக்கடியில் மிகுந்த சிரமப்படுகின்றனர். கழிப்பறை வசதி போதியளவில் இல்லை. மைதானமும் இல்லை. கூடுதல் கட்டிடமும் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x