Published : 09 Jun 2023 04:33 PM
Last Updated : 09 Jun 2023 04:33 PM

தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 வரை இலவச கல்வி நீட்டிக்கப்படுமா? - கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் பெற்றோர் எதிர்பார்ப்பு

பிரதிநிதித்துவப் படம்.

மதுரை: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் திட்டத்தில் தனியார் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களின் இலவச கல்வி முடிவடையும் நிலையில், இந்த திட்டத்தில் இலவசமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

எல்.கே.ஜி முதல் 8-ம் வகுப்பு வரை இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009-ம் ஆண்டு அறிமுகப்பட்டுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீட்டின்படி எல்.கே.ஜி முதல் 8-ம் வகுப்புவரை கல்விக் கட்டணம், புத்தகங்கள், சீருடைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படவேண்டும் என்ற சிறப்பம்சங்களுடன் அடித்தட்டு மக்களுக்கான சிறப்பு கல்வி சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் இந்தத் திட்டத்தில் இதுவரை சுமார் 7 லட்சம் மாணவர்களுக்கு மேல் பயனடைந்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 1.25 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறவேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 முதல் 30 சதவீதம் வரை சேர்க்கை நடைபெறாமல் காலி இடங்கள் ஏற்படுகிறது.

இத்திட்டம் தமிழ்நாட்டில் முழுமையாக நடைமுறைக்கு வந்த 2013-14 கல்வியாண்டில் சுமார் ஒரு லட்சம் இடங்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. போதிய விழிப்புணர்வு இல்லாததால் வெறும் 49,864 மாணவர்கள் மட்டுமே அந்த ஆண்டு எல்.கே.ஜி யில் சேர்க்கப்பட்டனர். அவ்வாறு சேர்ந்த மாணவர்கள் தற்போது 8ம் வகுப்பு முடித்துவிட்டனர். இவர்கள் அதே தனியார் பள்ளிகளில் 9ம் வகுப்பு தொடர கட்டணம் செலுத்த வேண்டும் அல்லது வேறு பள்ளிக்கு மாறுதல் வாங்கிக் கொள்ளலாம் என்று பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளனர். அதனால், இந்த மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்தி படிக்க முடியாத குடும்ப பொருளாதார சிக்கல் காரணமாக தொலைவில் உள்ள அரசு பள்ளிக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் அந்த மாணவர்கள் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

குழந்தைகளின் மனநிலையிலிருந்து பார்க்கும்போது திடீரென்று வேறு பள்ளிக்கு மாற்றுவது அவர்கள் மனதளவில் மற்றும் கல்விகற்கும் சூழலும் கடுமையாக பாதிக்கப்படுகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயார்ப்படுத்துவதில் மாணவர்களுக்கு மனதளவில் பின்னடைவை ஏற்படுத்தும். குறிப்பாக 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களின் 11-ம் வகுப்பு அவர்களுக்கான எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான பாடப் பிரிவுகளை தேர்ந்தெடுத்து படிப்பது போன்ற முக்கியமான ஆண்டாக அமைந்துள்ளது.

இச்சட்டத்தின்படி 8-ம் வகுப்புவரை படித்து முடித்துவிட்டு தற்பொழுது 9-ம் வகுப்பிற்கு வேறு பள்ளியில் சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால் புதிய பள்ளி, புதிய ஆசிரியர்கள், கட்டமைப்பு வசதிகள் என்று முற்றிலுமாக மாறுப்பட்ட சூழ்நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுவார்கள். இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.

இது குறித்து சமூக ஆர்வலர் வெரோணிக்கா மேரி கூறுகையில், ''கடந்த 2013-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்த இந்தத் திட்டத்தில் ஒரு சில ஆண்டுகள் மட்டும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவது போல் பள்ளிக் கட்டணம், பள்ளி சீருடைகள், புத்தகம், அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிக் கட்டணம் தவிர சீருடைகள், புத்தகம் உள்ளிட்ட அனைத்திற்கும் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானர்கள். இதனால் ஆண்டிற்கு ரூ.10 ஆயிரம் வரை ஒவ்வொரு மாணவர்களின் பெற்றோருக்கு செலவு ஏற்பட்டது. 10 ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் அவர்கள் செலவு செய்தனர்.

தனியார் பள்ளிகளும் அரசிடமிருந்து நிதி வரவில்லை என்று காரணம் கூறினார்கள். இதனால் இச்சட்டம் கொண்டுவரப்பட்டாலும் நடைமுறையில் அதன் முழு பலனை ஏழை மாணவர்களுக்கு சென்றடையவில்லை என்பது வேதனையானது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார் பள்ளிகளில் இலவசமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நீட்டிப்பு செய்யவேண்டும். இச்சட்டத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிச் சீருடைகள், புத்தகம் இலவசமாக வழங்க வேண்டும்'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x