Published : 03 Jun 2023 07:37 AM
Last Updated : 03 Jun 2023 07:37 AM

அரசுப் பள்ளிகளில் ஜூன் 9-ல் எஸ்எம்சி குழு கூட்டம்: பள்ளிக்கல்வித் துறை வழிமுறைகள் வெளியீடு

சென்னை: அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை, ஜூன் 9-ம் தேதி நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் இயங்கிவரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள்(எஸ்எம்சி) மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. அதன்படி, பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சிப் பிரதிநிதி மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக எஸ்எம்சி மாற்றி அமைக்கப்பட்டது. இதுதவிர, பள்ளிகளில் எஸ்எம்சி கூட்டம் மாதந்தோறும் முதல்வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு பள்ளி வளர்ச்சிக்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நடப்பு மாதத்துக்கான பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம், ஜூன் 9-ம் தேதி மாலை 3 முதல் 4.30 மணி வரை பள்ளிகளில் நடைபெற உள்ளது. இதில் பள்ளி வளர்ச்சிப் பணிகள், மாணவர் சேர்க்கை, மாற்றுத்திறனாளி மாணவர்களை அடையாளம் காணுதல், துணைத் தேர்வு எழுதுபவர்களுக்கு சிறப்புப் பயிற்சி,உயர்கல்வி வழிகாட்டி குழு, இல்லம் தேடிக் கல்வி, இலவச பொருட்கள் வழங்குதல் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

எஸ்எம்சி குழுவில் உள்ள ஆசிரியர், சமூக ஆர்வலர், உள்ளாட்சிப் பிரதிநிதிகளை அவசியம் கூட்டத்தில் பங்கேற்க வைக்கவேண்டும். இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை தீர்மானங்களாக நிறைவேற்றி தொடர்நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களின்படி எஸ்எம்சி குழு கூட்ட விவரங்களை தொகுத்து அறிக்கையாக இயக்குநரகத்துக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x