

சென்னை: வெளிநாட்டில் குடியுரிமை பெற்று, தமிழகத்தில் சட்ட விரோதமாக வாக்களித்த மேலும் ஒருவர், விமான நிலையத்தில் பிடிபட்டார். இதையடுத்து, கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில், நேற்று அதிகாலை 3.50 மணிக்கு, சென்னையில் இருந்து கத்தார் நாட்டு தலைநகர் தோகா செல்லும், விமானத்தின் பயணிகள் விமானம் புறப்பட தயாரானது.
அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் பாஸ்போர்ட் ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது, அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ஆபிரகாம் (65) என்பவர், தோகா வழியாக, பிரான்ஸ் செல்வதற்காக வந்தார்.
அவர் இலங்கை குடியுரிமை பெற்றவர். இதனால், அவர் இலங்கை நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருந்தார். அவருடைய கை விரல்களை ஆய்வு செய்த போது, இடதுகை ஆள்காட்டி விரலில், தேர்தலில் வாக்களித்ததற்கான அடையாள மை இருந்ததை, குடியுரிமை அதிகாரிகள் கண்டு பிடித்தனர்.
இதையடுத்து, குடியுரிமை அதிகாரிகள் அவரை நிறுத்தி வைத்து, விசாரித்தனர். விசாரணையில், இந்தியரான ஆபிரகாம், சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை குடியுரிமை பெற்றுவிட்டார்.
அதன் பின்பு, இப்போது பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிப்பதற்காக, கடந்த ஏப்ரல் மாதம் சொந்த ஊர் வந்தார்.
அவருடைய சொந்த தொகுதியான அருப்புக்கோட்டை வாக்குச்சாவடியில், வாக்களித்ததும், தற்போது, தோகா, வழியாக பிரான்ஸ் செல்ல முயன்ற போது பிடிபட்டுள்ளார்.
இந்திய குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்க முடியும். இந்தியர்களாக இருந்தாலும், வெளிநாட்டு குடியுரிமை பெற்று அந்த நாடுகளில் நிரந்தரமாக வசித்து வந்தால், அவர்கள் இந்திய தேர்தல்களில் வாக்களிப்பது சட்டப்படி குற்றம்.
இப்படி, தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள், சென்னை, திருச்சி, கோவை, மதுரை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் ஆணையத்தின் விதிகளை மீறி சட்ட விரோதமாக வாக்களித்ததாக இதற்கு முன்னர் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.