

சென்னை: வீடு தேடி கல்வி திட்டத்தின் கீழ், அரசு உதவித் தொகை தருவதாக, நூதன முறையில் பெண்ணிடம் பணம் பறிக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
சென்னை, அபிராமபுரம், சேமியர்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் நாஸியா நிஷா. இந்நிலையில், கடந்த 23-ம் தேதி நாஸியாவை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், உங்களது மகளுக்கு தமிழக அரசு வீடு தேடி கல்வி திட்டத்தின் கீழ், கல்லூரி உதவி தொகையாக ரூ.48,500 வந்துள்ளது.
30 நிமிடங்களில் அந்த பணம் உங்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், அந்த பணம் உங்களது வங்கி கணக்கில் வரவு வைக்க நாங்கள் அனுப்பும் க்யூஆர் கோர்டை ஸ்கேன் செய்யுங்கள்.
பின்னர், நாங்கள் சொல்வதுபோல் அடுத்தடுத்து செயல்படுங்கள் என கூறி க்யூஆர் கோர்டை அனுப்பி வைத்துள்ளார்.
அதை ஸ்கேன் செய்த சிறிது நேரத்தில் நாஸியா நிஷா வங்கி கணக்கில் இருந்து ரூ.70 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதாக குறுந்தகவல் வந்துள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நாஸியா நிஷா, இது தொடர்பாக, அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து நூதன முறையில் பணம் பறித்த நபரை தேடி வருகின்றனர்.