

சென்னை: எல்ஐசி பாலிசி முதிர்வுத் தொகைக்கான ரூ.3 லட்சத்து 22 ஆயிரத்து 500 காசோலையை போலி ஆவணங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் மூலம் வங்கியிலிருந்து எடுத்து மோசடி செய்த வழக்கில், 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 2009-ம் ஆண்டு அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் மேலாளராகப் பணியாற்றிய கண்ணன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில், எல்ஐசி பாலிசிதாரரான விஜயகுமார் என்பவரின் பாலிசி முதிர்வு தொகையான ரூ.3 லட்சத்து 22 ஆயிரத்து 500-க்கான காசோலை, அவரது சவுகார்பேட்டை முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், அந்தக் காசோலையை மர்ம நபர்கள் முறைகேடாகப் பெற்றதுடன், விஜயகுமார் பெயரில் போலியான ஆவணங்களைத் தயாரித்து, ஆள்மாறாட்டம் செய்து காசோலை தொகையை வங்கியில் இருந்து எடுத்து மோசடி செய்து விட்டனர்.
எனவே, அவர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும். மேலும், மோசடி செய்யப்பட்ட பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். ஆனால், மோசடிக்காரர்களை கண்டறிய முடியவில்லை.
இந்நிலையில், இவர்களை கண்டுபிடித்து கைது செய்ய காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார். அதன்படி, தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் மீண்டும் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
இந்நிலையில், இந்த மோசடி வழக்கில் 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தைச் சேர்ந்த பிரதாப்பை (41) கடந்த 31-ம் தேதி கைது செய்தனர். அவருக்கு உதவியாக இருந்த சென்னை தரமணி, எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த அர்ஜுனனை (வயது 50) நேற்று முன்தினம் கைது செய்தனர்.