

திருச்சி: கரூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தாய், தாத்தாவுடன் 2021-ல் திருச்சி புத்தூர் பகுதியில் தங்கியுள்ளார். அப்போது, அவருக்கு பலர் பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர். அந்த சிறுமியின் தாய், தாத்தா, தாத்தாவின் தம்பியான திமுக பிரமுகர் உள்ளிட்டோர் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், கர்ப்பமடைந்த அந்த சிறுமிக்கு 2023 ஜூன் 14-ம் தேதி தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு, சிறுமியுடன் அக்குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்டனர்.
இந்நிலையில், கடந்த டிச.23-ம் தேதி திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழுவில் விசாரணைக்கு ஆஜராகும்படி, சிறுமியின் குடும்பத்தினருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. கடந்த 3-ம் தேதி அந்த சிறுமி, தனது தாயார், தாத்தாவுடன் ஆஜரானார். விசாரணையில், தனக்கு யாரெல்லாம் பாலியல் தொல்லை கொடுத்தனர் என்று சிறுமி விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ராகுல்காந்தி புகார் கொடுத்தார். அதன்பேரில், சிறுமியின் தாய், தாத்தா, இவரது தம்பியான திமுக பிரமுகர் உட்பட 15 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
மேலும், சிறுமியின் தாய், தாத்தா, இவரது தம்பியைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். அத்துடன், சிறுமியின் குழந்தைக்கு யார் காரணம் என்பதைக் கண்டறிய டிஎன்ஏ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.