

நடிகர் ஜெயராம்
திருவனந்தபுரம்: கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் திருடப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் ஜெயராமிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் (எஸ்ஐடி) சென்னையில் விசாரணை நடத்தினர்.
சபரிமலை கோயில் கருவறை வாயிலில் இருபுறமும் உள்ள துவாரபாலர் சிலைகளின் தங்க கவசங்களை செப்பனிடுவதற்காக 2019-ம் ஆண்டு சென்னைக்கு அனுப்பப்பட்டன. அப்போது அவற்றின் எடை 42.8 கிலோவாக இருந்தது. சென்னை நிறுவனம் செப்பனிட்டு திரும்ப தங்க கவசங்களை ஒப்படைத்த போது 38 கிலோவாக குறைந்திருந்தது.
சுமார் நாலரை கிலோ தங்கம் மாயமானது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதால் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் உன்னி கிருஷ்ணன் போத்தி, முராரி பாபு உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக நடிகர் ஜெயராமிடம் சென்னையில் கேரள சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்று விசாரணை நடத்தினர். வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து இந்த விசாரணை நடத்தப்பட்டது. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட செப்புத் தகடுகள் மற்றும் அவரது வீட்டில் நடத்தப்பட்ட மதச் சடங்குகள் தொடர்பாக வெளியான ஊடக செய்திகளை அடிப்படையாக வைத்து ஜெயராமிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தங்கம் திருட்டு வழக்கில் முதன்மை குற்றவாளியான உன்னிகிருஷ்ணன் போத்தியுடன் ஜெயராம் எத்தனை மதச் சடங்குகளில் பங்கேற்றார், இருவருக்கும் இடையில் நிதிப் பரிவர்த்தனைகள் ஏதேனும் நடைபெற்றதா என்பது குறித்தும் எஸ்ஐடி குழு விசாரணை நடத்தியுள்ளது.
அப்போது, தங்க கவசம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் மகர விளக்கு பூஜையின்போது அறிமுகமான உன்னிகிருஷ்ணன் பல முறை சென்னையில் உள்ள தனது வீட்டுக்கு வந்து சென்றதாகவும் ஜெயராம் கூறியுள்ளார்.
தனது வீட்டில் தங்க கவசம் வைத்து பூஜை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்ட ஜெயராம், ஸ்மார்ட் கிரியேஷன் நிறுவனத் தில் நடத்தப்பட்ட பூஜைக்கு உன்னிகிருஷ்ணன் அழைப்பின் பேரில் தான் சென்றாகவும், அவருக்கும் தனக்கும் இடை யில் எந்தவிதமான நிதிப் பரிவர்த்தனையும் இல்லை என்றும் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.