

சென்னை: மதுரவாயல், மேற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் முத்து ஜெகநாதன் (28). தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் விஷுவல் எடிட்டராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று காலை வழக்கம்போல் தனது வீட்டிலிருந்து பைக்கில் சென்னையில் உள்ள அலுவலகத்துக்கு புறப்பட்டார்.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ரேஷன் கடை பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, அந்த வழியாக கோயம்பேடு நோக்கி வந்த அரசுப் பேருந்து ஒன்றின் பக்கவாட்டு பகுதி எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறிய முத்து கீழே விழுந்து பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.
தகவல் அறிந்து மதுரவாயல் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடம் விரைந்து உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநரைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.