

சிவகாசி: சிவகாசி அருகே விஸ்வநத்தம் பட்டாசு ஆலையில் இன்று மாலை ஏற்பட்ட வெடி விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின. இதில் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில், கட்டிட இடிபாடுகளில் சிக்கிய இரு பெண்கள் காயமடைந்தனர்.
சிவகாசி அருகே விஸ்வநத்தம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (50). இவர் சென்னை வெடிபொருள் கட்டுப்பாட்டு உரிமம் பெற்று சிவகாசி அருகே விஸ்வநத்தம் - சித்துராஜபுரம் சாலையில் காமராஜர் நகரில் நடேஷ் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை மாலை 3.50 மணி அளவில் பட்டாசுக்கு மருந்து செலுத்தும்போது வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் அருகே பட்டாசு இருப்பு வைத்திருந்த அறையும், 50 அடி தூரத்தில் இருந்த அறை என 3 அறைகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த விபத்தில் ஒருவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கட்டிட இடிபாடுகளில் சிக்கி சித்ராசபுரத்தைச் சேர்ந்த பூமாரி (31), பானுப் பிரியா(32) ஆகிய இரு பெண்கள் காயமடைந்தனர். அவர்களை பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பட்டாசு ஆலையில் பணியாற்றிய காமராஜர் நகரை சேர்ந்த குருநாதன்(45) என்பவரை தேடி வருகின்றனர். தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.