

மதுரை: மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே அதிகாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த, ஆம்னி பேருந்து சாலை தடுப்பை உடைத்துச் சென்ற போது எதிரே வந்த அரசுப் பேருந்து மீது மோதியது. இதில் உதவித் தலைமை ஆசிரியர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர், 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நோக்கி பயணிகளுடன் ஆம்னி பேருந்து புறப்பட்டது. பேருந்தை ஓட்டுநர் சுரேஷ் ஓட்டினார். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே வஞ்சிநகரம் என்ற இடத்தில் நான்கு வழிச்சாலையில் அதிகாலை சுமார் 3.20 மணிக்கு சென்றபோது ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சாலையின் எதிர் திசைக்கு பாய்ந்தது.
அப்போது மதுரையில் இருந்து திருச்சிக்குப் பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதியது. மேலும், அதே வேகத்தில் சாலையோரம் இருந்த பயணிகள் நிழற்குடையிலும் மோதியது. அதிகாலை நேரம் என்பதால் தூக்கத்தில் இருந்த பயணிகள் விபத்தால் அலறினர். தகவல் அறிந்த கொட்டாம்பட்டி போலீஸார், தீயணைப்புத் துறையினர் விரைந்து இரு பேருந்துகளிலும் சிக்கியவர்களையும், நிழற்குடை இடிபாட்டில் சிக்கிய வஞ்சிநகரம் பெருமாள் என்பவரையும் மீட்டனர்.
இந்த விபத்தில் நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜெயசீலன் மனைவி சிறியபுஷ்பம் (56), திசையன்விளையைச் சேர்ந்த ஜான்சன் மகன் ஆபிரகாம் ( 40 ) திருச்சி எடமலைப்பட்டியைச் சேர்ந்த துவரங்குறிச்சி அரசுப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் ஆனந்தராஜ் (46), திருச்சி காவல்துறை குடியிருப்பு கணேசன் மகன் சூர்யா (29), திருவாரூர் முகமது யாசின் (60), ஆகிய 5 பேரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். சிறிய புஷ்பம், ஆபிரகாம் ஆகியோர் ஆம்னி பேருந்திலும், மற்ற 3 பேரும் அரசுப் பேருந்திலும் பயணித்தவர்கள் ஆவர்.
அரசுப் பேருந்து ஓட்டுநர் ஜோதி உள்பட 2 பேருந்திலும் பயணித்த 41 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மேலூர், மதுரை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் பெருமாள் (70) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. விபத்து நடந்த இடத்தை மதுரை சரக டிஐஜி அபினவ்குமார், எஸ்பி தேவநாதன் பார்வையிட்டனர். கொட்டாம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் விஜய் அவர்களது குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக தலா ரூ.3 லட்சமும் பலத்த காயமடைந்த 7 பேருக்கு தலா ரூ.1 லட்சமும் இலேசான காயமடைந்த 15 பேருக்கு தலா ரூ.50,000-மும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
வெகு தூரம் ஒரே ஓட்டுநர்: ஆம்னி பேருந்து ஓட்டுநர் சுரேசை திருச்சியில் மற்றொரு ஓட்டுநர் மாற்றவேண்டி இருந்தது. ஆனால், அவரை மாற்றாமல் இருந்ததால் சென்னையில் இருந்து ஒருவரே தொடர்ந்து ஓட்டியதாக தெரிகிறது. இதனால் விபத்து நிகழ்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.