

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மேலும், இப்பகுதியைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கும் அமெரிக்காவுக்கு, இந்த நீர்வழிப்பாதை வழியாகச் செல்லும் அனைத்து வணிகக் கப்பல்களும் அவற்றின் சரக்கு மதிப்பில் 20 சதவீதத்தை பாதுகாப்புக் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஈரானுடன் அண்மையில் எட்டப்பட்டிருந்த தற்காலிக அமைதி உடன்படிக்கையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ள நிலையில், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள ட்ரம்ப், “ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து திறந்தே இருக்கும். அமெரிக்கா இனி ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாவலன் என்று அழைக்கப்படும். இந்த ஆபத்தான பகுதியில் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான செலவினங்களை ஈடுகட்ட, நியாயமான முறையில் 20 சதவீத கட்டணம் உடனடியாக வசூலிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஈரான் கப்பல்கள் மற்றும் அதன் வாடிக்கையாளர்களின் கப்பல்களை மட்டுமே இலக்காகக் கொண்டு ஈரான் முற்றுகை மீண்டும் அமல்படுத்தப்படுவதாகவும், மற்ற நாடுகளின் கப்பல் போக்குவரத்துக்கு எவ்வித தடையும் இருக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். முன்னதாக செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், "கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்கா இந்த ஜலசந்தியை எவ்வித கட்டணமுமின்றி இலவசமாக பாதுகாத்து வந்தது, இனிமேல் அவ்வாறு நடக்காது" என்றும் கூறியிருந்தார்.
அமெரிக்காவின் இந்த அறிவிப்பை ஈரான் ராணுவத்தின் தலைமை கூட்டுப் படைப்பிரிவு உடனடியாக நிராகரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியின் மேலாண்மையில் அமெரிக்காவுக்கு எவ்வித பங்கும் இல்லை என்றும், ஈரானின் அனுமதியின்றி அமெரிக்கப் படைகள் இப்பகுதியில் ஊடுருவ முயன்றால் அதற்கு கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் இந்தத் திட்டத்துக்கு பிராந்திய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என்றும், மீறி உதவினால் அது ஈரானுக்கு எதிரான போராகக் கருதப்படும் என்றும் ஈரான் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.