

உள்படம்: எம்எல்ஏ சதன்
சென்னை: ரூ.1 கோடி காசோலை மோசடி வழக்கில் மதிமுக எம்எல்ஏ சதன் திருமலைக்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மதிமுகவைச் சேர்ந்த டாக்டர் சதன் திருமலைக்குமார் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ-வாக உள்ளார்.
2016-ல் தனது தொழில் வளர்ச்சிக்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.1 கோடி கடன் பெற்றுள்ளார். இதற்காக தலா ரூ.50 லட்சத்துக்கு 2 காசோலைகளை அவர் வழங்கியுள்ளார்.
ஆனால் அந்தக் காசோலைகள் பணமின்றித் திரும்பியதால், 2019-ல் சதன் திருமலைக்குமாருக்கு எதிராக அந்நிறுவனம் எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ-வாக பதவி வகிப்பதால், இந்த வழக்கு விசாரணை எம்.பி. எம்எல்ஏ-க்கள் மீதான காசோலை மோசடி வழக்குகளை விசாரிக்கும் ஜார்ஜ் டவுன் 3-வது பெருநகர சிறப்பு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, அங்கு நீதிபதி சுந்தரபாண்டியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, எம்எல்ஏ சதன் திருமலைக்குமார் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். மேலும், சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 2 மாதம் அவகாசம் வழங்கியும், அதுவரை சிறை தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிட்டார்.