

சென்னை: சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்த 27 வயது இளம் பெண் ஒருவர், தனது அக்காவுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இவர் அருகில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 25-ம் தேதி இரவு, அந்தப் பெண்ணின் அக்கா தனது உறவினரைப் பார்ப்பதற்காக வெளியே சென்றிருந்தார். இதனால் இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்பெண் உறங்கிக் கொண்டிருந்தபோது, அந்த வீட்டின் உரிமையாளர் மகனான அனந்த கிருஷ்ணன் (41) வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். அவர் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்து விழித்த அந்தப் பெண் கூச்சலிட முயன்றபோது, அனந்த கிருஷ்ணன் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
வெளியே சென்றிருந்த அக்கா வீடு திரும்பியதும், நடந்த கொடுமையைக் கூறி அந்த இளம்பெண் கதறி அழுதுள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அனந்த கிருஷ்ணனைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருவது தெரியவந்தது.
விசாரணையைத் தொடர்ந்து, அனந்த கிருஷ்ணனை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.