

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே ரூ.20 ஆயிரம் கடனுக்காக நிறைமாதக் கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அனுப்ப மறுத்ததால், கொட்டகையிலேயே தாயும் சேயும் இறந்த விவகாரத்தில் மரக்கடை உரிமையாளர் மீது தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சிங்காடிவாக்கம் ஊராட்சி, இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆனந்த் (40). இவரது மனைவி தேன்மொழி (35). இத்தம்பதியினர் தங்களது குடும்பத்தினருடன் காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில் வெள்ளை கேட்பகுதியில் ஆறுமுகம் என்பவரது விறகு வெட்டும் பட்டறையில் கடந்த 6 மாதங்களாகக் கூலி வேலை செய்து வந்துள்ளனர்.
இதற்காக ஆறுமுகத்திடம் ஆனந்த் ரூ.20 ஆயிரம் முன்பணம் வாங்கியிருந்ததால், அங்கேயே கொட்டகை அமைத்துத் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில், நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த தேன்மொழியைப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உரிமையாளர் ஆறுமுகத்திடம் ஆனந்த் அனுமதி கேட்டுள்ளார்.
ஆனால், வாங்கிய கடனுக்கு விறகு வெட்டிக் கொடுத்துவிட்டுத்தான் செல்ல வேண்டும் எனக் கூறி ஆறுமுகம் அனுமதி மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே நேற்று முன்தினம் மதியம் கொட்டகையில் இருந்த தேன்மொழிக்குக் கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்திலேயே தேன்மொழியும், அவரது வயிற்றில் இருந்த சிசுவும் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் கொட்டகையிலேயே உயிரிழந்தனர்.
இது தொடர்பாக ஆனந்த் பொன்னேரிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மக்கள்மன்றம் உள்ளிட்ட அமைப்புகள் இது தொடர்பாகப் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்தன. இதனைத் தொடர்ந்து போலீஸார் இயற்கைக்கு மாறான மரணம் என்று வழக்குப் பதிவு செய்தனர்.
இதை ஏற்காமல் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் ஆனந்த் தரப்பினர் மனு அளித்தனர். தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தினர். கொத்தடிமையாக அவர்களை வைத்திருந்ததாகவும் புகார் கூறினர்.
இதனைத் தொடர்ந்து போலீஸார் தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். கொத்தடிமையாக வைத்திருந்த சம்பவம் தொடர்பாகச் சார் ஆட்சியர் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கைது செய்ய வலியுறுத்தல்
இந்நிலையில் தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநிலச் செயலாளர் ஜா.பூபாலன் வெளியிட்ட அறிக்கையில், ``இந்தச் சம்பவத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டும்குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படாதது கண்டிக்கத்தக்கது. உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேன்மொழி குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், பல்வேறு மாவட்டங்களில் கொத்தடிமைகளாக பணியாற்றும் இருளர் குடும்பங்களை மீட்டு மறுவாழ்வு அளிக்க வேண்டும்'’ என்று தெரிவித்துள்ளார்.