

பத்மபிரியா
சென்னை: வங்கி லாக்கரில் இருந்து வாடிக்கையாளர்களின் 2 கிலோ தங்க நகைகள் நூதன முறையில் திருடப்பட்ட வழக்கில் வங்கியின் முன்னாள் பெண் அதிகாரி 2-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள தனியார் வங்கியில் கடந்த டிச.5-ம் தேதி பர்தா அணிந்தபடி பெண் ஒருவர் வந்தார். தன்னை சர்மிளா பானு என அறிமுகம் செய்து கொண்டார். தனது கணவர் அப்துல் இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார்.
அதேபோல, தனக்கும் கணக்கு தொடங்க வேண்டும் என கேட்டுள்ளார். இந்த நிலையில், வங்கிக் கணக்கு தொடங்க தேவையான ஆவணங்களை எடுத்து வருவதாக கூறிச் சென்ற அந்தப் பெண், திரும்ப வரவில்லை. இதற்கிடையே, அவர் அமர்ந்திருந்த இருக்கையில் ஒரு பெரிய பர்ஸ் இருந்தது.
அதை வங்கி அதிகாரிகள் திறந்து பார்த்தபோது, தங்க பிஸ்கட், வளையல் உட்பட சுமார் 2 கிலோ தங்க நகை இருந்துள்ளது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் வேளச்சேரி காவல் நிலையத்தில் தங்கத்தை ஒப்படைத்து புகார் அளித்தனர்.
நகையை விட்டுச் சென்றது வங்கியின் முன்னாள் ஊழியரான வேளச்சேரியைச் சேர்ந்த பத்மபிரியா (38) என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இவர், லாக்கரில் வைக்கப்படும் நகைகளை மேற்பார்வையிடும் அதிகாரியாக இருந்துள்ளார்.
அப்போது, தணிக்கை செய்வதாக கூறி வாடிக்கையாளர்களின் நகைகளை சிறிது சிறிதாக திருடி உள்ளார். இந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
பின்னர், கைவசம் இருந்த நகைகளை யாருக்கும் தெரியாமல் வங்கியில் எடுத்த லாக்கரிலேயே வைக்க முயன்றபோது அது முடியாததால் அந்தநகைகளை வங்கியிலேயே விட்டுச் சென்றது தெரியவந்தது.
இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் அந்த பிரிவு போலீஸார் அவரை மீண்டும் கைது செய்துள்ளனர்.