

இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள்.
ராமேசுவரம்: இந்தியப் பெருங்கடலில் 193 கிலோ போதைப் பொருட்களை கடத்தி வந்த, இலங்கையைச் சேர்ந்த 5 பேரை அந்நாட்டு கடற்படையினர் கைது செய்தனர்.
சர்வதேச கடல் பகுதியில் போதைப் பொருட்களை ஏற்றிச் செல்லும் படகுகள் மற்றும் கப்பல்களை செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கை கடற்படை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
இலங்கையின் தெற்கு கடல் பரப்பான இந்தியப் பெருங்கடல் பகுதியிலிருந்து இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்த ஒரு ஆழ்கடல் மீன்பிடிப் படகை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி, திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்குக் கொண்டு சென்றனர்.
படகை ஆய்வு செய்ததில் 172 கிலோ ஐஸ் போதைப் பொருள், 21 கிலோ ஹெராயின் என மொத்தம் 193 கிலோ போதைப் பொருட்கள் இருந்தன.
அவற்றைப் பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர், படகில் இருந்த, இலங்கையைச் சேர்ந்த 5 பேரைக் கைது செய்தனர். இதுகுறித்து இலங்கை கடற்படையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.