

சென்னை: சூப்பர் மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களைப் போல் நடித்து நூதன முறையில் திருடிய 2 பெண்கள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை, அண்ணா நகர் 6-வது அவென்யூவில் பிரபல சூப்பர் மார்க்கெட் உள்ளது.
இந்த கடைக்கு நேற்று முன்தினம் 2 பெண்கள் உட்பட 5 பேர் வந்தனர். அவர்கள் நீண்ட நேரத்துக்கு பிறகும் எந்த பொருட்களையும் வாங்காமல் சென்றனர். ஆனால் சூப்பர் மார்க்கெட்டில் இருந்த பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது.
சந்தேகத்தின்பேரில் கடை நிர்வாகத்தினர் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் கடைக்கு வாடிக்கையாளர்கள் போல் வந்த 5 பேரும் டீத்தூள், எண்ணெய் பாக்கெட்டுகள் மற்றும் மளிகைப் பொருட்களை தங்களது உள்ளாடைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு, கடையிலிருந்து வெளியேறியது தெரியவந்தது.
இதேபோல, அண்ணா நகர் 3-வது அவென்யூவில் உள்ள அதே சூப்பர் மார்க்கெட் கிளையிலும் இதே பாணியில் பொருட்கள் திருடப்பட்டன.
பெரிய பாக்கெட் பாவாடை: இதையடுத்து இந்த 2 விவகாரம் தொடர்பாக அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில் திருட்டில் ஈடுபட்டது தேனி மாவட்டம் கம்பம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த லட்சுமி என்ற நாகலட்சுமி (50), அதே பகுதியைச் சேர்ந்த நாகம்மாள் என்ற நாகு (70) என்பது தெரிந்தது.
இவர்களை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த முருகன் (58), அதே மாவட்டம், கோவில்பாப்பாகுடியைச் சேர்ந்த கரண்குமார் (25), வேலூர் மாவட்டம், கோண வட்டத்தைச் சேர்ந்த முதார்சீர் (40) ஆகிய மேலும் 3 பேரை கைது செய்தனர்.
விசாரணையில், இவர்கள் 5 பேரும் 10 வருடங்களுக்கும் மேலாக, தமிழகம் முழுவதும் பல இடங்களில் இதுபோல சூப்பர் மார்க்கெட்டுகளில் பொருட்களை திருடியுள்ளது தெரிந்தது. இதற்காக பெரிய அளவிலான பாக்கெட்டுகளுடன் பாவாடைகளை வைத்துள்ளனர்.
சமீபத்தில் சென்னைக்கு வந்து, வடபழனியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கி, வடபழனி, அண்ணா நகர் மற்றும் பல இடங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் திருடியுள்ளனர்.
திருடிய பொருட்களை தங்களது சொந்த ஊருக்கு டிராவல்ஸ் மூலம் பார்சல்களில் அனுப்பி விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய கார், கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.